மு.க. ஸ்டாலின் செயல்பாடு வேடிக்கையாவும் விநோதமாவும் இருக்கு... தெறிவிக்கவிடும் செல்லூர் ராஜூ..!

By Asianet TamilFirst Published Jun 12, 2021, 10:10 PM IST
Highlights

தற்போது டாஸ்மாக் கடைகளை திறந்துவிடும் முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
 

மதுரையில் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கூட்டுறவு துறை அமைச்சர் என் மீது கூறிய குற்றச்சாட்டுகளை நான் சட்டமன்றத்தில் விவாதிக்க தயார். தவறு யார் செய்திருந்தாலும் அது ஆண்டவனே செய்திருந்தாலும் தவறுதான். ஆட்சியிலும் கட்சியிலும் எந்தத் தவறும் நடைபெறாமல் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் திறமையாக செய்து காட்டியிருக்கிறார்கள். தவறு யார் செய்தாலும் அவர்களை நாங்கள் தண்டித்திருக்கிறோம். அதுபோல், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அமைச்சர் நடவடிக்கை எடுக்கட்டும். அதை நாங்கள் வரவேற்கிறோம்.
கூட்டுறவுத் துறை கணினிமயமானதால்தான் இந்தியாவிலேயே காப்பீடு திட்டம் மூலம் அதிக காப்பீடு தொகை பெற்ற மாநிலமாக தமிழகம் இருக்கிறது. டாஸ்மாக் கடையைத் திறக்க கூடாது என்று கறுப்புச்சட்டை அணிந்து குடும்ப சகிதமாக சென்ற ஆண்டு ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். ஆனால், இன்றைக்கு அவரது ஆட்சியில் டாஸ்மாக்கை திறக்க உத்தரவிட்டுள்ளார். இது வினோதமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. டாஸ்மாக் கடையைத் திறக்க உத்தரவிட்ட முதல்வர், டீக்கடையை திறக்கவும் உத்தரவிட வேண்டும்.
 ஏனெனில் சாமானியர்கள்தான் இக்கடைகளை நடத்தி வருகின்றனர். அவர்கள் கடை வாடகை தர வேண்டும். தினசரி வாழ்வாதாரத்துக்கு உழைக் வேண்டும். டீக்கடைகளில் குறைந்தபட்சம் இருவர் வேலை பார்க்கின்றனர். அவர்கள் குடும்ப வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும். கட்டுமானபொருட்கள், மளிகைப் பொருள்களின் விலை எல்லாம் இன்று கடுமையாக உயர்ந்துவிட்டன. இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
 

click me!