சோர்ந்து கிடக்கும் உ.பி.க்களை உசுப்பிவிட்ட ஸ்டாலின் கடுதாசி...

By sathish kFirst Published Aug 27, 2019, 5:51 PM IST
Highlights

தன்மானம் காக்கும் போரில் வெற்றியன்றி வேறில்லை என்ற ஆர்ப்பரிப்புடன் அணிவகுப்போம்! என தி.மு.க. தலைவர்  மு.க.ஸ்டாலின் ‘முரசொலி'யில்  ‘உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன்' எழுதும் மடலில்... நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்!

சமூகநீதியை காத்துவரும் நமது தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் பவள விழா! தன்மான போருக்கான ஆயத்த விழா சேலம் மாநகரத்தில் இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களின் அறிவுரை களுக்குச் செவிமடுப்போம் - தன்மானம் காக்கும் போரில் வெற்றியன்றி வேறில்லை என்ற ஆர்ப்பரிப்புடன் அணிவகுப்போம்! என தி.மு.க. தலைவர்  மு.க.ஸ்டாலின் ‘முரசொலி'யில்  ‘உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன்' எழுதும் மடலில்... நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்!

‘எல்லா சாலைகளும் ரோமாபுரி நோக்கி’ என்பார்கள். அதுபோல, திராவிட உணர்வுமிக்க தமிழர்களின் திசை தேடும் விழிகள் எல்லாம் இப்போது  சீலம் மிகுந்த சேலத்தை மட்டுமே  நோக்கி இருக்கிறது. காரணம், நமது தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் பவளவிழா சேலம் மாநகரத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. எந்த சேலத்தில் ‘திராவிடர் கழகம்' என்ற சித்தாந்தப் பெயர் சூட்டப்பட்டதோ, அந்த சேலத்தில் எழுச்சியூட்டிடும் சிறப்பு விழா.

ஆகஸ்ட் 27 அன்று காலை 9 மணிக்கு, சேலம் அம்மாப் பேட்டை அன்னை மணியம்மையார் நினைவரங்கத்தில் தொடங்கும் நிகழ்ச்சி, மாலையில் கருங்கடல் போன்ற பேரணியால் எழுச்சியும் ஏற்றமும் பெற்று, சேலம் கோட்டை மைதானத்தில் நிறைவு விழா என்ற நினைவில் நிரந்தரமாகத் தங்கும் விழா நிகழவிருக்கிறது. தாய்க்கு விழா என்றால் தனயர்கள் இல்லாமலா? மானமிகு ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறும் தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் பவளவிழாவில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் நிறைவுரையாற்றும் நல்வாய்ப்பினைப்  பெற்றிருக்கிறேன்.

தோழமைக் கட்சித் தலைவர்களான கே.எஸ். அழகிரி,  அண்ணன் வைகோ, கே.எம்.காதர் மொய்தீன் , இரா.முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், தொல்.திருமாவளவன், ஜவாஹிருல்லா , பேராசிரியர் சுப.வீ என சமூக நீதியைக் காத்து, களத்தில் நிற்கும் தளகர்த்தர்கள் பலரும் திராவிடர் கழகத்தின் பவள விழா மாநாட்டில் பங்கேற்கிறோம்.

திராவிட இனத் தமிழ்க்குடிகளை தன்மானமும் பகுத்தறிவும் மிக்க தகுதிகள் செறிந்த சமுதாயமாக மாற்றும் மகத்தான பணியினை, தொண்டு செய்து பழுத்த பழமாகத் தொடர்ந்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின்  தலைமையில் உருவான சுயமரியாதை இயக்கத்தின் கருஞ்சட்டைப் படையும்; வெள்ளையர் ஆட்சிக்காலத்திலேயே,  பிறப்பின் அடிப்படையிலான சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்றிடும் வகையில் வகுப்புவாரி இடஒதுக்கீடு, பெண்களுக்கு வாக்குரிமை, கோவில் சொத்துகள் கொள்ளை போகாமல் பாதுகாக்க இந்து அறநிலையச் சட்டம், தேவதாசி முறை எனும் பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு, ஆதிதிராவிட மக்களின் நலன் காக்கும் சட்டங்கள் எனப் பல முற்போக்குத் திட்டங்களை நிறைவேற்றிய நீதிக்கட்சியும்; இணைந்து பயணித்து, இந்தி ஆதிக்கத்தை வீழ்த்திட அறப்போர்க் களம் கண்டு தமிழர்களின் மொழி உரிமை மீட்கப்பட்ட காலம் அது.

மிட்டாமிராசுகள், ஜமீன்தார்கள், ‘சர்’ பட்டம் சூட்டப் பட்டோர், ராவ்பகதூர் - திவான்பகதூர் பட்டங்களைப் பெற்றவர்கள் -  இவர்கள்தான் அரசியலில் பங்கேற்று முன் னிலை வகித்திட முடியும் என்ற நிலையினை மாற்றிடவும், எந்த மக்களின் சமூகநீதிக்கும் சுயமரியாதைக்கும் இந்த இயக்கம் பாடுபடுகிறதோ, அந்த எளிய மக்களும் நடப்பு அரசியலைப் புரிந்துகொண்டு, சமுதாயப் பணிகளிலும் சீர்திருத்தப் பணிகளிலும் பங்கேற்றிட வாய்ப்பளித்திடும் நோக்கத்துடன் தந்தை பெரியார் அவர்களும், அவர்தம் தளபதியாக விளங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களும் ஒரே மாதிரி சிந்தித்து செயலாற்றியதன் விளைவுதான், 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் நாள் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் பெயர் மாற்றப்பட்டு, திராவிடர் கழகம் என்கிற பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘அண்ணாதுரை தீர்மானம்' என்ற பெயரில் பேரறிஞர் அண்ணா அவர்கள் முன்மொழிந்த அந்த தீர்மானமும், அதில் அடங்கியிருந்த பெயர் மாற்றமும், திராவிட இயக்கத் தலைவர்களால் நீண்டநேர விவாதத்திற்குட்படுத்தப்பட்டு, ஆரோக்கியமான ஜன நாயக வழிமுறையில் ஆதரவினைப் பெற்று நிறை வேறியதன் காரணமாக, திராவிடர் கழகம் என்ற பெயர் வரலாற்றில் நிலைபெற்று, சமுதாய மறுமலர்ச்சியில் தன்னிகரில்லாப் பெரும் பங்கைச் செலுத்தியிருக்கிறது.

பெயர் மாற்றம் செய்யப்பட்ட இயக்கத்திற்கு புதுக் கொடி ஒன்றை உருவாக்கும் முயற்சியில், தந்தை பெரியாரின் கொள்கைக் குருகுலமான ஈரோடு “குடிஅரசு” அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனையின்போது, அங்கே துணை ஆசிரியராகப் பணியாற்றிய நம் ஆருயிர்த்

தலைவர் கலைஞர் அவர்கள், கறுப்பு வண்ணத்தின் நடுவே சிவப்பு வட்டம் வரைய மை கிடைக்காததால், தன் விரலைக் கீறி அதிலிருந்து வழிந் தோடிய  இரத்தத்தால் சிவப்பு வட்டம் வரைந்து கொடி உருவாக்கத்தை நிறைவு செய்தார். கலைஞரின் குருதியினால் கொடி உருவாக்கம் பெற்ற அந்த மகத் தான இயக்கத்திற்கு இன்று பவள விழா.

தந்தை பெரியாரிடமிருந்து 1949ல் பிரிய நேர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மக்கள் இயக்கத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கியபோதும், திராவிடர் கழகத் தின் சுயமரியாதை - சமூகநீதி - பகுத் தறிவு எனும் அடிப்படைக் கொள்கை களிலிருந்து அது விலகாமல், தமிழர் நலன் காக்கும் உரிமைப்போரில் இரட்டைக் குழல் துப்பாக்கியாகவே செயல்பட்டது. 1967 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்தபோது, சுயமரியாதை திருமணச் சட்டத்தை நிறைவேற்றி தனது ஆட்சியையே பெரியாருக்கு காணிக்கையாக்கியவர் பேரறிஞர் அண்ணா. இயற்கை இரக்கமின்றி அவர் உயிரைப் பறித்தபோது, கட்சி யையும் ஆட்சியையும் தோளில் சுமக் கும் பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் அவர்கள்,   தந்தை பெரியாரின் இலட்சி யங்களைத் தொடர்ந்து நிறைவேற்றும் அவரது குருகுலத்து மாணவராகவே திகழ்ந்தார்.

பிறப்பால் ஒடுக்கப்படும் அனைத்து தரப்பு மக்களுக்குமான இடஒதுக்கீடு, பெண்களுக்குச்  சொத்துரிமை, தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு எனப் பெரியாரின் பெருங்கனவை நனவாக் கிய தலைவர் கலைஞர் அவர்கள், தந்தை பெரியாரின் நெஞ்சில் இருந்த முள் எனப்படும் ‘அனைத்து ஜாதியின ரும் அர்ச்சகராகும் சட்ட’த்தையும் நிறைவேற்றியவர்.

தாயின் எண்ணங்களை நிறைவேற் றும் தனிச் சிறப்புப் பெற்ற தனயர்களாக  பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் ஆற்றிய சீர்மிகு பணி களின் காரணமாக, இன்று இந்திய அரசியலையும் மாநில உரிமைகளை யும் பாதுகாக்கும் முன்மாதிரி (‘மாடல்’) மாநிலமாகத் தமிழகம் தனித்துவத் துடன் விளங்குகிறது.

வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் போர்க்களங்கள் ஓய்ந்துவிடவில்லை. இந்தியாவின் பன்முகத்தன்மையைச்  சிதைத்து, மதவெறியை வளர்த்து, சமூகநீதிக்குக் குழி வெட்ட நினைக்கும்  சக்திகளின் அதிகாரக் கரங்களால் நீட் திணிக்கப்பட்டு தமிழ்நாட்டு மாணவ - மாணவியரின் உயிர்கள் பறிக்கப்படுகிறது.

ஜம்மு - காஷ்மீரில் தொடங்கி புதுச்சேரி யூனியன் பிரதேசம் வரை மாநில உரிமைகள் நசுக்கப்படுகின்றன. அரசி யல் சட்டத்திற்கு விரோதமான, பொரு ளாதார அடிப்படையிலான இடஒதுக் கீடு திணிக்கப்பட்டுள்ளது. தாய்மொழி யாம் தமிழ் மொழியைக் கந்தலாக்கி இந்தியையும் சமஸ்கிருதத்தையும் புகுத்துவதற்கான சதிவலை பின்னப் படுகிறது. இன்னும் பல வடிவங்களில் மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் வேகம் பெற்றுள்ள இந்தக் காலச்சூழலில் தந்தை பெரியா ரும் பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் நம்மிடையே இல்லை என்றாலும், அவர்கள் வழங்கிய இலட் சிய தீபம் நம் கைகளில் அணையாத அற்புத  விளக்காகச் சுடர் விடுகிறது.

அந்தச் சுடரை உயர்த்துவோம்! இனப்பகை எனும் இருட்டை விரட்டு வோம்! ஜனநாயக விரோத சக்திகளை எதிர்கொள்ளும் வலிமையைப் பெருக்கும் தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் பவளவிழாவினை நமது பயிற்சிக்களமாக்குவோம். மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களின் அறி வுரைகளுக்குச் செவி மடுப்போம். தன் மானம் காக்கும் போரில் வெற்றியன்றி வேறில்லை என்ற ஆர்ப்பரிப்புடன் அணிவகுப்போம்! என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

click me!