முதலமைச்சரான பிறகு முதன் முறையாக மோடியை சந்திக்கும் ஸ்டாலின்.. 30 அம்ச கோரிக்கை மனுவை கொடுக்க உள்ளதாக தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Jun 16, 2021, 5:05 PM IST
Highlights

அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மத்திய அரசின் தொடர்புடைய பிரச்சனைகள் குறித்து நாளைய சந்திப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என தெரிகிறது.

முதலமைச்சராக பதிவியேற்ற பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முதன்முறையாக நாளை  பிரதமரை சந்திக்கிறார். நாளை சந்திக்கும்போது 30 அம்ச கோரிக்கை மனுக்களை பிரதமரிடம் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7ம் தேதி பதவி ஏற்றார். அப்போது கொரோனா 2ம் அலை தீவிரமாக இருந்ததன் காரணமாக, பதவியேற்ற நாளில் இருந்து அவரது அமைச்சரவை, தொற்று பவரல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதற்கான மருத்துவ ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் தேவை பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை கடிதங்கள்மூலம் வலியுறுத்தினார். 

குறிப்பாக, செங்கல்பட்டில் கொரோனா தடுப்பு உற்பத்தி மையத்தை விரைவில் தொடங்குவது குறித்து கடிதம் எழுதியதோடு, மாநிலங்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றும் கருத்து வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மத்திய அரசின் தொடர்புடைய பிரச்சனைகள் குறித்து நாளைய சந்திப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என தெரிகிறது. நீட் தேர்வு பிரச்சினை ஹைட்ரோகார்பன், 7 பேர் விடுதலை தொடர்பாகவும், தற்போது தமிழகத்தில் செலவீனம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகையை உடனடியாக விடுவிக்கவும் கோரிக்கைகள் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மரியாதை நிமிர்த்தமாகவும் பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

நாளை மாலை 5 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து, நாளை காலை சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். தி.மு.க.வின் மக்களவை மற்றும் மாநிலங்களைவை உறுப்பினர்களும் டெல்லி சென்றுள்ளனர். பின்னர் மாலை 5மணியளவில் பிரதமரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் வழங்க உள்ளார். அதன் தொடர்ச்சியாக,  திமுக கட்சி அலுவலகமான அறிவாலயம் கட்டிட பணிகளையும் முதலமைச்சர் பார்வையிடுவார் என்று தெரிகிறது. நாளை இரவு டெல்லியில் தங்கும் முதல்வர், மறுநாள் (18ம் தேதி) காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்திக்கும் முதலமைச்சர், பிற்பகலுக்கு பின் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார். 

 

click me!