ஸ்டாலின்தான் முதல்வரா வருவார்... மதுரையில் பொன்னாரை வசமாக கலாய்த்த மூதாட்டி..!

By Asianet TamilFirst Published Apr 14, 2021, 9:28 PM IST
Highlights

'ஸ்டாலின்தான் முதல்வராக வருவார்’ என்று மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை மூதாட்டி ஒருவர் கலாய்த்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
 

முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். சாமி தரிசனத்துக்குப் பிறகு செய்தியாளர்களை பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தார். “இந்தத் தேர்தலில் திமுக பெரும் சரிவை சந்திக்கும்” என்று பொன்னார் தெரிவித்தார். பேட்டி முடிந்த பிறகு பொன். ராதாகிருஷ்ணன் அங்கிருந்து கிளம்ப தயாரானார். அப்போது இந்தப் பேட்டியைக் கவனித்த மூதாட்டி ஒருவர், பொன்னார் அருகே வந்தார்.  பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அவர் வணக்கம் வைத்தார். பதிலுக்கு பொன்னாரும் வணக்கம் வைத்தார்.


அப்போது அந்த மூதாட்டி, ‘ஐயா ஸ்டாலின்தான் முதல்வராக வருவார். எங்களுடைய கஷ்டம் எல்லாம் தீரணும்’ என்று மூதாட்டி கூறினார். உடனே அதற்கு பொன்னார், ‘'அம்மாகிட்ட(மீனாட்சியம்மனிடம்) சொல்லுங்க” என்று கோயிலை கை காட்டினார். அதற்கும் சலிக்காத அந்த மூதாட்டி, “'அம்மாகிட்ட பேசிட்டுதான் வர்றேன். ஸ்டாலின்தான் முதல்வரா வருவார்” என்று சொன்னார். இதை எதிர்பார்க்காத பொன்னார், “ரொம்ப சந்தோஷம்” என்று கும்பிட்டுவிட்டு காரில் ஏறி கிளம்பிவிட்டார். 
பொன்னாருக்கும் மூதாட்டிக்கும் இடையே சுமுகமாக இந்தப் பேச்சுவார்த்தை நடந்திருந்தாலும், பொன்னாரின் அருகே இருந்த பாஜக தொண்டர்கள் மூதாட்டியின் பேச்சைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

click me!