
அரசு ஊழியர்கள் தினம் ரூ. 2000 மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலையில் அனைத்து செலவுகளுக்காகவும் ஏடிஎம்களில் நின்றால் அரசுப்பணியை மேற்கொள்ள முடியாது ஆகவே நவம்பர் மாதம் வழங்கும் சம்பளத்தை பணமாக வழங்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுக்குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை:
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏழை-நடுத்தர மக்களையே அதிகளவில் பாதித்து வருவதை இந்தியா முழுவதும் காண முடிகிறது.
கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர்கள் பாதுகாப்பாக உள்ள நிலையில், உழைத்து சம்பாதிக்கும் மக்களின் நிலையே நாளுக்கு நாள் அவலத்திற்குள்ளாகி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக மத்திய-மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் ஆகியோரும் பெரும் நெருக்கடியை சந்திக்க இருக்கிறார்கள்.
மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கும் பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றுவோருக்கும் மாதந்தோறும் ரொக்கமாக வழங்கப்பட வேண்டிய சம்பளத்தை இந்த முறை வழங்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுபோலவே அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுகிற மூத்த குடிமக்கள்-அவர்களது குடும்பத்தினர் நிலையும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
ஓர் இரவில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிரதமர் மோடி அவர்கள், அதற்கு மாற்றாக புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் போதிய அளவில் தயாராக இருக்கிறதா என்பதை கவனிக்கத் தவறியதன் விளைவை இந்தியா அனுபவித்து வருகிறது.
வங்கிகள் முன்பாகவும், ஏ.டி.எம்.கள் முன்பாகவும் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் மக்கள் காத்திருக்கிறார்கள். புதிய 2000 ரூபாய் நோட்டுகளையும், இனிமேல் பரவலான புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படும் புதிய 500 ரூபாய் நோட்டுகளையும் தற்போதுள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில் வைப்பதற்கான வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், டிசம்பர் 1ந் தேதியோ அதற்கு முன்பாகவோ மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் சம்பளம் எந்த முறையில் தரப்படும் என்பது தெரியாத நிலையில், தங்களுக்கான ஊதியத்தை ரொக்கமாகத் தரவேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து போராடி வருகிறார்கள்.
அவர்களின் போராட்டத்தில் உள்ள நியாயத்தை மத்திய-மாநில அரசுகள் உணரவேண்டும். வீட்டு வாடகை, பிள்ளைகளின் பள்ளிக்கட்டணம், மளிகை கடைக்கான செலவு, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான செலவு உள்ளிட்ட பலவற்றுக்கும் ரொக்கமாக பணம் தரவேண்டியுள்ள நிலையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுகளுக்கு இருக்கிறது.
நாட்டில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்திற்கு மட்டுமே 15 ஆயிரத்து 350 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இவர்கள் போக, தமிழகம் உள்ளிட்ட 29 மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள், தகவல்தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவோர் எனப் பலருக்கும் மாதத்தின் முதல் வாரத்தில் ஊதியம் தந்தாக வேண்டும்.
ஏ.டி.எம்.களில் ஏற்கனவே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கும் நிலையில், அரசு ஊழியர்களும் பொதுத்துறை-தனியார்துறை ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஊதியத்தைப் பெறுவதற்காக அதே வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், மொத்தமுள்ள 2 லட்சத்து 20ஆயிரம் ஏ.டி.எம்களிலும் புதிய ரூ.2000, ரூ.500 ரூபாய் நோட்டுகளை எடுப்பதற்கான வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. மத்திய அரசு தரப்பின் இந்தத் தோல்வியை மறைப்பதற்காக, அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக வழங்கும் ஊதியத்தை வங்கி வரைவோலை-காசோலை-டெபிட் கார்டு மூலமாக பணப்பரிவர்த்தனை செய்ய ஆணையிடுவது அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையாகும்.
அவசரத் தேவைகளுக்கு ரொக்கப் பணமே தேவைப்படும் நிலையில், மற்ற வழிமுறைகள் உடனடி பயனைத் தராது. உழைத்து சம்பாதித்தவர்களுக்கு அலைச்சலையும் மன உளைச்சலையுமே தரும்.
மேலும், ஏ.டி.எம்களில் நாளொன்றுக்கு 2000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலையும், வங்கிகளில் வாரத்திற்கு 24ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலையும் அரசுப் பணியில் உள்ளோருக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கும்.
தங்கள் ஊதியப் பணத்தை எடுப்பதற்காக அவர்கள் செலவிடும் நேரம் என்பது பொதுமக்களுக்காக அரசாங்கம் ஆற்ற வேண்டிய பணிகளையும் பாதிக்கக் கூடியதாகும். எனவே, அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை ரொக்கமாக வழங்குவதே சரியான நடைமுறையாக அமையும்.
பிரதமர் மோடி அவர்களின் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி-பொருளாதார முடக்கம் ஆகியவை சரி செய்யப்படும் வரை மத்திய-மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த மாத ஊதியத்தையும் அடுத்தடுத்த மாதங்களுக்கான ஊதியத்தையும் ரொக்கமாக வழங்கிட ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
பேரிடர் கால நடவடிக்கைக்கு இணையாக இதில் மத்திய அரசும் மாநில அரசும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.