
ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 15 பேர், புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேர் என மொத்தம் 24 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடிக்க சென்றதாக இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த வின்னரசன், ரூதர் ஆகியோருக்கு சொந்தமான படகுகளில் அதே பகுதியை சேர்ந்த சீரிஸ் (28), பூண்டிராஜ் (40), நிசாந்த் (20), முருகன் (43),ஜாக்கோ (30), ரூபன் (28), இன்பம் (33), அந்தோணி (28), ஆலன் (25), ராஜா (34), தீபன் (30), நடராஜன் (40), மெல்ராஜ் (28), சுவிசன் (32), பேசில் (30) ஆகியோர் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் 15 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அனைவரும் 17ம் தேதி வரை காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மீனவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோல் அதேநாளில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் 2 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அவர்களையும் இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.
அவர்களை, மார்ச் 15ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து, 9 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரே நாளில் 24 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நடுக்கடலில் மீனவர்களை கைது செய்த் இலங்கை கடற்படைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
தமிழக மீனவர்களை இலங்கை அரசு கொடுமை செய்வதை எந்த அரசாலும் அனுமதிக்க முடியாது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அதிமுக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக மீன்வளத்துறை அமைச்சர், உடனடியாக டெல்லி சென்று, மத்திய அரசிடம் பேச வேண்டும். வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் பிரதமரை சந்தித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையில் உள்ள மீனவர்களை விடுவிக்க போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருந்துவிடக்கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.