
திமுகவை அழிக்க நினைத்தவர்கள், அரசியலில் எங்கு இருக்கிறர்கள் என தெரியாமல், விலாசம் இல்லாமல் அனாதையானார்கள் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, மு.க.ஸ்டாலின் கூறினார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் அதிமுக அழிந்துவிட்டது. திமுக அழிந்து கொண்டு இருக்கிறது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பாஜகவை, தமிழகத்தில் வளர்க்க எவ்வளவு முயற்சித்தாலும், முடியாமல் போய் கொண்டு இருக்கிறது. இதனால், அவர் விரக்தி அடைந்து, மனம் நொந்து பேசுகிறார்.
அவரை தமிழக மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிடுகிறார்கள். அதனால், அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து, அவரை அனைவருக்கும் நினைவுபடுத்தி வருகிறார். குறிப்பாக திமுகவின் பெயரை கூறி, தன்னை தானே விளம்பரம் செய்து கொள்கிறார்.
பாஜக என்ற கட்சியில் பொன். ராதாகிருஷ்ணன் போன்ற ஒருவர் அமைச்சராக இருப்பதற்கு, திராவிட இயக்கம் தான் காரணம் என்பதை அவர் மறக்க கூடாது.
திமுவை அழிக்க நினைத்தவர்கள், அரசியலில் எங்கு இருக்கிறர்கள் என தெரியாமல், விலாசம் இல்லாமல் அனாதையானார்கள் சான்றுகள் நிறையவே இருக்கிறது.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.