
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் உறவினர்கள், உழைக்கும் எங்களுக்கு, உங்கள் பணம் எதற்கு என வாக்குவாதம் செய்தனர். இதனால், ஆறுதல் கூற வந்த அமைச்சர் அலறி அடித்து கொண்டு ஓடினார்.
கடலில் எல்லை தாண்டியதாக கடந்த 1, 3 ஆகிய தேதிகளில், நாகை மீனவர்கள் 17 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
தற்போது கச்சத்தீவில் திருவிழா நடக்க இருக்கிறது. இந்த நேரத்தில் மீனவர்களை கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மீட்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கை படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காகவும், நிதயுதவி வழங்கவும் அக்கரைப்பேட்டை கிராமத்துக்கு தமிழக ஜவுளித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்றார்.
17 குடும்பங்களுக்கும், தலா ரூ.10 ஆயிரம் கொடுத்த அவர், இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை ஒரு வாரத்தில் அழைத்து வருவோம் என கூறினார்.
ஆனால், அங்கிருந்த மீனவ குடும்பத்தினர், இப்போது எதற்காக இங்கே வந்தீர்கள். நாங்கள் படகுகளை இழந்து, வாழ்வாதாரம் பாதித்து பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். உழைத்து பிழைக்கும் எங்களுக்கு நீங்கள் கொடுக்கும் பணம் தேவையில்லை. எங்களுக்க படகு தான் வேண்டும் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், அமைச்சர் மணியன், படகுகளை மீட்பது குறித்த நடவடிக்கைகளை மத்திய அரசுதான் செய்ய வேண்டும். மத்திய அரசு நவடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மீனவர்களுக்கு தேவையானதை மாநில அரசு செய்து கொடுக்கும். விரைவில் படகுகள் மற்றும் மீனவர்கள் வந்து சேருவார்கள். என கூறிவிடு, அங்கிருந்து வேகமாக காரில் புறப்பட்டு சென்றார்.