
நாட்டின் தலையாய பிரச்சனைக்காக வரும் தமிழக எம்பிக்களை சந்திக்க மாட்டீர்கள் ஆனால் நடிகர் நடிகைகளை சந்திக்க நேரம் ஒதுக்குவீர்களா? என்று மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை விமர்சித்தார்.
இன்று ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர் பேசியதாவது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதராவாக அரசியல் கட்சிகள் நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் அதையும் மீறி இன்று இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் குதித்துள்ளனர்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பை உடனடியாக வழங்க முடியாது என்று கூறியபோது முதலமைச்சர் ஓபிஎஸ் என்ன செய்திருக்க வேண்டும். டெல்லிக்கு சென்றிருக்க வேண்டும். பிரதமரை சந்தித்திருக்க வேண்டும்.
உங்களுக்கு 50 எம்பிக்கள் இருக்கிறார்கள் என்ன செய்கிறீர்கள் . 50 பேர் டெல்லி சென்றீர்கள் பிரதமரை சந்திக்க முடிந்ததா? பிரதமர் சந்திக்கவில்லை. ஆனால் சினிமா நட்சத்திரங்களை பிரதமர் சந்திக்கிறார். கவுதமி , சோனாலி கபூர் , சல்மான் கான் , ரஜினிகாந்த் என சினிமா நட்சத்திரங்களை சந்திக்கிறார்.
நான் சினிமா நட்சத்திரங்களை விமர்சிக்கவில்லை , ஆனால் தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக 50 எம்பிக்களை சந்திக்க மறுக்கும் பிரதமர் சினிமா நட்சத்திரங்களை சந்திக்கிறார்.
ஜல்லிக்கட்டு பிரச்சனை மட்டுமல்ல , காவிரி பிரச்சனைக்காக நீங்கள் டெல்லி சென்ற போதும் பிரதமர் உங்களை சந்திக்க முடியவில்லை, பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கி தாருங்கள் என்று ஏன் கேட்க முடியவில்லை , நீங்கள் இரு அவைகளில் 50 எம்பிக்களை வைத்துள்ளீர்கள் , ஏன் பிரதமரை நிர்பந்திக்க முடியாதா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.