இஸ்லாமியர்களின் உரிமை காக்கும் உண்மை பாதுகாவலன் திமுக! பட்டியல் போட்டு ரமலான் வாழ்த்து சொன்ன ஸ்டாலின்..!

Published : May 24, 2020, 10:40 AM ISTUpdated : May 24, 2020, 10:42 AM IST
இஸ்லாமியர்களின் உரிமை காக்கும் உண்மை பாதுகாவலன் திமுக! பட்டியல் போட்டு ரமலான் வாழ்த்து சொன்ன ஸ்டாலின்..!

சுருக்கம்

1969-ல் மிலாதுநபிக்கு முதன்முதலில் அரசு விடுமுறை; உருது பேசும் முஸ்லிம்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது; இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் சமுதாய மக்கள் பயனடைய "சிறுபான்மையினர் நல ஆணையம்" துவங்கியது; ஓய்வூதியம் பெற்று வந்த 2000 உலமாக்களின் எண்ணிக்கையை 2400 வரை உயர்த்தியது; முதன்முறையாக வக்ஃபு வாரியச் சொத்துகளைப் பராமரிப்பதற்கென 40 லட்சம் ரூபாய் மானியம் வழங்கியது என்று பல்வேறு சாதனைத் திட்டங்கள் அதில் அடங்கும்.

தமிழகத்தில் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் இஸ்லாமிய மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: அன்பிற்கு இலக்கணமாக, இரக்கம் - கருணையின் அடையாளமாக, ஈகைக் குணத்தின் வெளிப்பாடாகத் திகழும் இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயபூர்வமான இரமலான் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். “கொரோனா” பேரிடர் காலத்தில் - “தனித்திருப்போம்” என்ற மருத்துவ நெறிமுறைகளைக் கடைப்பிடித்து - மிகுந்த நெருக்கடியிலும் - தங்களை வருத்திக் கொண்டு - நோன்பைக் கடைப்பிடித்துள்ள இஸ்லாமிய சமுதாய மக்களின் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் அயராது பாடுபட்டு வருகிறது என்பதை இஸ்லாமியர் அனைவரும் அறிவர். சமூக, பொருளாதார திட்டங்களையும், பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்து - அவற்றைத் திறம்பட கழக அரசு நிறைவேற்றியும் இருக்கிறது.

1969-ல் மிலாதுநபிக்கு முதன்முதலில் அரசு விடுமுறை; உருது பேசும் முஸ்லிம்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது; இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் சமுதாய மக்கள் பயனடைய "சிறுபான்மையினர் நல ஆணையம்" துவங்கியது; ஓய்வூதியம் பெற்று வந்த 2000 உலமாக்களின் எண்ணிக்கையை 2400 வரை உயர்த்தியது; முதன்முறையாக வக்ஃபு வாரியச் சொத்துகளைப் பராமரிப்பதற்கென 40 லட்சம் ரூபாய் மானியம் வழங்கியது என்று பல்வேறு சாதனைத் திட்டங்கள் அதில் அடங்கும். தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்” “உருது அகாடமி” தொடங்கியது, "காயிதே மில்லத் மணிமண்டபம்" அமைத்திட நிதி ஒதுக்கி, அடிக்கல்லும் நாட்டி கட்டி முடிக்கத் தொடர் நடவடிக்கை எடுத்தது என்ற சாதனைகளுக்கு இடையே – இஸ்லாமியர்களுக்கு, பிற்படுத்தப்பட்டோருக்கான 30 விழுக்காட்டில் 3.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியது கழக சாதனைகளுக்கு எல்லாம் மணிமகுடமாகும்!

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் - இஸ்லாமிய சமுதாயத்தினருக்குமான நல்லுறவு - பேரறிஞர் பெருந்தகை அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என நீடித்து நிலைத்து - தற்போதும் அது தொடர்ந்து வருகிறது. இஸ்லாமியர்களுக்கு என்ன சோதனை- எப்பக்கத்தில் இருந்து வந்தாலும், தப்பாமல் குரல் கொடுத்து - உரிமை போற்றும் உண்மைப் பாதுகாவலனாக திராவிட முன்னேற்றக் கழகம் முன்னணியில் நின்று வருகிறது. ஒப்பற்ற இந்தச் சமுதாயத்தின் வாழ்க்கைத் தரமும் - நல்வாழ்வும் மேலும் உயர்ந்து, சிறப்பாக அமைந்திடவும், சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் நாளும் தழைத்திடவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த இரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்து மகிழ்ச்சி கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!