கடந்த சனிக்கிழமை அதிகாலையில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ஈரான் கப்பலும் டான் காஞ்சிபுரம் என்ற என்னை கப்பலும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் டான் காஞ்சிபுரம் கப்பல் கடுமையாக சேதமடைந்தது.
அதிலிருந்து கசிந்த எண்ணெய் கடல் நீரில் கலந்து படலமாக மாறி விட்டது.
சுமார் நூற்றுக்கணக்கான டன்கள் எண்ணெய் படலம் வங்காள விரிகுடாவில் கலந்ததால் சென்னை எண்ணூரில் இருந்து கடைகோடி காரைக்கால் வரை கடல் நீர் கடுமையாக மாசடைந்துள்ளது.
இந்நிலையில் எண்ணூர் துறைமுகம் பகுதியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டு அப்பகுதி மக்களை சந்தித்தார்.பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.
அப்போது கடலில் கச்சா எண்ணெய் கலந்துள்ளதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
அப்போது ஷீலா பாலகிருஷ்ணன் பதவி விலகல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின்,
"அரசு தரப்பில் இருந்து இது பற்றி எந்த தகவலும் இல்லை. ராஜினமா செய்ததாக சொல்லப்படும் அந்த செய்தியும் இதுவரை வரவில்லை. என்னைப் பொறுத்தவரையில் நான் சொல்ல விரும்புவது, ஓய்வுபெற்று இருக்கக்கூடியவர்களுக்கு தான் அரசு பணியில் இந்த அரசு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே பணி மூப்பு அடிப்படையில் சில பதவிகளை உருவாக்கித் தர வேண்டிய இந்த அரசு, இதுவரை அதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை.
இந்த அரசைப் பொறுத்தவரையில் ஒரு மிகப்பெரிய மர்மமான நிலையில் தான் இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், முதல்வராக இருந்த ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் என்ன என்பதும் மர்மமாக இருக்கிறது. அவரது மரணம் எப்படி நடந்தது என்பதும் மர்மமாக இருக்கிறது.
அதுபோலவே, இப்போது அதிகாரிகள் ராஜினமாவா, இல்லையா என்பதும் கூட மர்மமாகவே இருக்கிறது.
என்று தெரிவித்தார்.