
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி ஜூன் 3 ஆம் தேதி தனது 93 வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். பிறந்தநாளுடன் பேரவை வைர விழாவையும் திமுக நடத்தவிருக்கிறது.
ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் விழாவை மிகப் பிரம்மாண்டமாக நடத்த கழக உடன்பிறப்புகள் பணியாற்றி வருகின்றனர்.
இதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார், புதுவை முதல் அமைச்சர் நாராயணசாமி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
வைர விழாவின் கதாயநாயகனான கருணாநிதி உடல்நலக்குறைவால் நிகழ்ச்சியில் பங்கேற்ற தற்போதைய சூழலில் வாய்ப்பு இல்லை என்றும், மருத்துவர்கள் அனுமதி அளிக்கும் பட்சத்தில் விழாவில் அவர் பங்கேற்பார் என்றும் மு.க.ஸ்டாலின் அண்மையில் தெரிவித்திருந்தார்.
கருணாநிதியின் இவ்வைரவிழாவுக்கு இன்னும் ஆறு தினங்களே எஞ்சியுள்ள நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கருணாநிதியின் உறுதிமிக்க நிலைப்பாடு வைரத்திற்கு குறைந்தல்ல என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
பிறந்தநாளுடன் பேரவை வைர விழாவும் இணைந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பதாகத் தெரிவித்த ஸ்டாலின், ஏறத்தாள 50 ஆண்டுகாலமாக தமிழக அரசியலில் அச்சாணியாகத் திகழ்ந்தவர் கருணாநிதி என்றும் பாராட்டு தெரிவித்தார். கருணாநிதியின் இந்த வைர விழாவில் பங்கேற்க அனைத்து தொண்டர்களும் ஜூன் 3 ஆம் தேதி சென்னை வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.