
தற்போதைய சூழலில், பால் பச்சைக் குழந்தைகளின் பசியை ஆற்றுகிறதோ இல்லயோ, தமிழக அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கெடுப்போகாமல் இருப்பதற்காக பாலில் பிணத்தின் மீது தெளிக்கப்படும் ரசாயத்தை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்துவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மையில் பகிர் குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார். பாலில் கலப்படம் செய்யவில்லை என்று நிரூபித்தால் தூக்கில் தொங்கவும் தயார் என்று ராஜேந்திர பாலாஜி பகிரங்க சவால் விடுத்திருந்தார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இக்குற்றச்சாட்டு தமிழகம் முழுவதும் தீயாய் பற்றி எரியும் நிலையில், பாலில் ரசாயனக் கலப்பிடம் குறித்து ஆய்வு செய்ய விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இந்தச் சூழலில் தனியார் பால் நிறுவனங்களிடம் இருந்து பணம் பெறவே இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடுமையாகச் சாடியுள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், ஆவின் பால் தூய்மையானதா என்பதை முதலில் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். பா.ஜ.க.வின் பினாமியாக அதிமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், பா.ஜ.க.வின் மூன்றாண்டு ஆட்சி வேதனை அளிக்கும் வகையில் தான் உள்ளது என்று கூறினார்.