தேசிய அளவில் அடுத்த கட்டத்துக்கு ஸ்டாலின் செல்ல வேண்டும்.. புதிய திமுக கவுன்சிலர்களுக்கு கட்டளையிட்ட ஆ. ராசா.!

By Asianet TamilFirst Published Feb 25, 2022, 8:55 PM IST
Highlights

வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமர் என்ற முடிவை எடுக்கும் இடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளார் இங்கு பேசிய பலரும் கருத்து தெரிவித்தனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலை திமுக தலைவர் ஸ்டாலினே தீர்மானிக்க இருக்கிறார். 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை அடுத்த நிலைக்கு, தேசிய அளவிலான இடத்துக்கு கொண்டுச் செல்ல பாடுபட வேண்டும் என்று திமுக எம்.பி. ஆ.ராசா பேசினார்.

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசாவை சந்தித்து பேசினர். அவர்கள் மத்தியில் ஆ.ராசா பேசுகையில், “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் மக்களுக்காக உழைக்கும் வகையில் வேறு வாய்ப்புகள் மற்றும் பணிகளை மாவட்ட கழகம் வழங்கும். 

வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமர் என்ற முடிவை எடுக்கும் இடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளார் இங்கு பேசிய பலரும் கருத்து தெரிவித்தனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலை திமுக தலைவர் ஸ்டாலினே தீர்மானிக்க இருக்கிறார். அதற்கு முன் உதாரணமாகத்தான் தற்போது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் திமுகவும் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வெற்றிக்கு காரணமே தமிழக முதல்வர் ஸ்டாலின்தான். ஸ்டாலினின் இந்த வெற்றி இந்தியாவுக்கே ஒரு செய்தியைச் சொல்வதாக அமைந்துள்ளது. சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும், உள்ளாட்சிகளில் வெற்றி பெற்றவர்கள் மூலமே அதையெல்லாம் நிறைவேற்ற முடியும்.

உங்களுடைய வெற்றிக்குக் காரணமே நீலகிரி மாவட்டத்தில் உள்ள சாதாரண திமுக தொண்டர்கள்தான். எனவே, தொண்டர்களையும், வாக்களித்த பொதுமக்களையும் உள்ளாட்சிகளில் வெற்றி பெற்றவர்கள் மதித்து நடக்க வேண்டும். மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றும் போது, எந்தப் பாரபட்சமின்றி அனைத்து அடித்தட்டு மக்களுக்கும் அனைத்து வசதிகளும் சென்றடையும் வகையில், இங்கு வெற்றி பெற்றவர்கள் மேற்கொள்ள வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் அகில இந்திய அளவில் சிறந்து விளங்கி வருகிறார். தமிழக முதல்வராக உள்ள அவரை அடுத்த நிலைக்கு, தேசிய அளவிலான இடத்துக்கு கொண்டுச் செல்ல நீங்கள் பாடுபட வேண்டும்” என்று ஆ.ராசா பேசினார். 
 

click me!