போலீஸ்காரர்களுக்கு ஸ்டாலின் ஒரு ஆண் தாய்..! கவிதை எழுதியதற்காக டிஸ்மிஸ் ஆன செல்வராணி பரபரப்பு அறிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Aug 5, 2021, 12:24 PM IST
Highlights

நிறைய காவலர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் ஸ்டாலின் நல்லா இருக்கனுன்னு வாழ்த்துகின்ற செய்தியை என் காதால் கேட்கும்பொழுது ஆனந்தமாய் இருக்கிறது.

திருச்சி, பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியை ஆரம்பித்து, திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் முகநூல் பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றியவர் செல்வராணி ராமச்சந்திரன். இவர் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி மீது மிகுந்த 
பற்று கொண்டவர். 

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கருணாநிதி உடல்நலக் குறைவால் காலமானார். அப்போது பணியிலிருந்த செல்வராணி, கருணாநிதி குறித்து உருக்கமுடன் இரங்கற்பா எழுதி அதை கவிதை வடிவில் வாட்ஸ் அப்பில் வெளியிட்டார். அவரது இரங்கற்பா ஊடகங்களிலும், வலைதளங்களிலும் 
வெளியாகி வைரலானது.

இதுகுறித்து கடந்த ஆகஸ்டு 14-ம் தேதி திருச்சி காவல்துறை அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு விளக்கமளித்த அவரை நாகப்பட்டினத்துக்கு இடமாற்றம் செய்தனர். இதனால் அவர் தனது பணியை இராஜினமா செய்தார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி அனைத்துக் கட்சிகளின் ஆர்ப்பாட்டத்திற்காக திருச்சி சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்,  செல்வராணியின் விவரத்தை அறிந்து நேரடியாக அவரது வீட்டிற்குச் சென்று அவரை சந்தித்து உரையாற்றினார்.

அதன்பின் தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலின், அரசு காவல்துறை சார்பாக இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. ஒன்று வி.வி.ஐ.பி.கள் வரும்போது பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் சாலையில் நிற்பது கூடாது என்பது. மற்றொன்று, கண்டிப்பாக வாரத்திற்கு ஒருமுறை காவலர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும்.

இந்நிலையில் இவற்றை வாழ்த்தி முன்னாள் காவலர் செல்வராணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், 
‘மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பெண் காவலர்களுக்கு ஒரு ஆண் தாய் என்று நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன். அந்த ஆண்தாயான ஆண்டவனை வணங்குகிறேன். முதல்வர் பெண் காவலர்கள், VVIPகள் வரும்பொழுது சாலையோர பாதுகாப்பில் நிற்க வேண்டாம் என்ற அறிவிப்புக்கண்டு வியந்து போனேன். 

எப்படி ஒரு ஆழமான சிந்தனை! பெண் காவலர்களின் மன நிலையை யாருமே இதுவரை புரிந்ததில்லை. நாங்கள் புரிய வைக்க முயற்சித்து முயற்சித்து பல முறை தோற்று போய் இருக்கிறோம். ஒரு பெண் முதலமைச்சராக இருந்த போதும்கூட எங்களின் நிலையை அவர்கள் உணரவே இல்லை. ஒரு பெண்ணின் வலி இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்பதெல்லாம் பொய்த்துப் போய்விட்டது. ஒரு பெண்ணின் வலி ஆணுக்கும் தெரியுமென நிரூபித்திருக்கிறார் நம் முதல்வர் மு.க. ஸ்டாலின்.


 
21 ஆண்டுகள் காவல் துறையில் பணியில் இருந்திருக்கிறேன். கர்ப்பிணியாக இருக்கும் போதும் இரவு பணிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
VVIPகள் வருகை என்றால் பல மணி நேரங்களுக்கு முன்னதாகவே ரோட்டுக்கு போய்விட வேண்டும். சாப்பாட்டைப் பற்றியோ, இயற்கை உபாதைகளைப் பற்றியோ யாரும் கவலைப்பட மாட்டார்கள். கவலைப்பட்டதும் இல்லை. ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடமாடும் ரெஸ்ட் ரூம் வாகன வசதியை பெண் காவலர்களுக்கு செய்து கொடுத்திருப்பது கண்டு கண்கள் ஆனந்தத்தில் அழுகிறது.

2005ல் அம்மையார் ஜெயலலிதா திருச்சிக்கு வருகிறார். எனக்கு திருச்சி விமான நிலைய சாலையில் தான் பணி. நாலு மணி நேரத்துக்கு முன்னதாகவே டூட்டி பார்க்கும் இடத்துக்கு போய்விட வேண்டும். என் நான்கு மாத கைக் குழந்தையை பால் கொடுத்து வீட்டுல் விட்டுட்டு டூட்டிக்கு வந்துவிட்டேன். குழந்தை வீட்டுல் பசியில் கத்திக்கொண்டிருப்பதாக தகவல் வருகிறது. குழந்தை பசியில அழற சேதி கேட்டதுமே பால் கசிந்து என் காக்கி உடை நனைந்து கொண்டிருக்கிறது. 

ஆண் காவலர்களின் மத்தியில் கூனி குறுகிபோய் நின்றேன். தண்ணீரை எடுத்து நெஞ்சு முழுவதும் நனைத்துக் கொண்டேன். யாராவது கேட்டால் தண்ணீர் குடிக்கும் போது தவறி சட்டையில் ஊத்திவிட்டது என்று சொல்லலாம் என்று. பால் கொடுக்க அனுமதி கிடைக்கவில்லை. வருவது VVIP ஆப்சென்ட் ஆனா தொல்லை. ஆகவே குழந்தையை ஆட்டோவில் கொண்டு வரச் சொல்லி நான் டூட்டி பார்த்த இடத்திலேயே ஆட்டோவில் அமர்த்து என் மகளுக்கு 
பாலூட்டி அனுப்பினேன்.

இதை எழுத நான் வெட்கப்படவில்லை. யார் என்ன நினைப்பார்களோ என்று நான் கவலைப்படவும் இல்லை. யாருமே வலியை எழுதாவிடில் எப்படி வலி பிறருக்கு தெரியும்? இந்த மாதிரியான கடினங்களை கடந்த என்னைப்போன்ற பெண் காவலர்களால் தான் புரிந்து கொள்ள முடியும் முதல்வரின் இந்த அறிவிப்பையும் தாயுள்ளத்தையும்.

 1973ல் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கருணாநிதி தான் முதன் முதலில் பெண் காவலர்களை பணிக்கு அமர்த்தினார். ஒரு அரசியல் சாணக்கியனால் கூட இப்படி சிந்தித்து செயல்படுத்த முடியாத ஒன்றை அவர் பெற்ற பிள்ளை ஸ்டாலின் செயல்படுத்துவதை கண்டு மகிழ்கிறேன். இவற்றையெல்லாம் கண்டு மகிழ தகப்பன் கருணாநிதி இன்று இல்லையே என்று வருந்துகிறேன்.

காவலர்கள் போதுமான நேரத்தை குடும்பத்தோடு செலவிட முடியாததால் தான் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். மனைவி குழந்தைகளோடு சேர்ந்து மூ‌ன்று வேளை உணவு கூட உண்டிருக்க மாட்டார்கள். அதனால் தான் காவலர்கள் பெரும்பாலும் விரக்தியில் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் அறிந்து வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அறிவித்திருப்பது காவலர்கள் மத்தியில் அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முதலமைச்சரை காவலர் குடும்பங்கள் கொண்டாடுகிறார்கள். நிறைய காவலர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் ஸ்டாலின் நல்லா இருக்கனுன்னு வாழ்த்துகின்ற செய்தியை 
என் காதால் கேட்கும்பொழுது ஆனந்தமாய் இருக்கிறது.

முதல்வரைக் காணும் ஒவ்வொரு பெண் காவலர்களுக்கும் முதல்வர் மீது கொண்ட தாயன்பும், மதிப்பும், மரியாதையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 
பத்து ஆண்டுகாலங்கள் அடிமைப்பட்டுக் கிடந்த நம் நாட்டை மீட்டெடுக்க எத்தனை எத்தனை போராட்டங்கள்! அவமானங்கள், புறக்கணிப்புகள். எல்லாவற்றையும் கடந்து போராடி ஆட்சியைப் பிடித்தப்பின்னும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் ஆகச்சிறந்த உழைப்பாளியை நாம் வணங்கத்தான் வேண்டும். முன்னாள் காவலர் என்ற முறையிலும், தங்கை என்ற மகிழ்ச்சியிலும் இரு கரம் கூப்பி நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்’என்று தெரிவித்துள்ளார்.

click me!