
திமுக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சென்னைக்கு வருமாறு அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அவசர அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக தலைவர் கருணாநிதி, வயது முதிர்வு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். அரசியலிலிருந்து ஒதுங்கி ஓய்வு எடுத்துவரும் கருணாநிதி, அவ்வப்போது அண்ணா அறிவாலயத்திற்கு சென்றுவருவார்.
கடந்த 18ம் தேதி அவருக்கு வழக்கமாக சிகிச்சை அளித்துவரும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில், இன்று கருணாநிதியின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததாகவும் அவர் வழக்கத்தைவிட அதிகமான சோர்வடைந்ததாகவும் தகவல்கள் பரவின.
இதையடுத்து, கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை சந்தித்துவிட்டு அவரது உடல்நிலை குறித்து பேட்டியளித்த ஸ்டாலின், கருணாநிதி உடல்நலத்துடன் இருக்கிறார். லேசான காய்ச்சல் தானே தவிர மற்றபடி ஒன்றுமில்லை. அதனால் வதந்திகளை நம்பவேண்டாம் என விளக்கமளித்தார்.
இந்நிலையில், தற்போது திமுக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்களை சென்னைக்கு வருமாறு ஸ்டாலின் அவசர அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கருணாநிதியின் உடல்நிலை குறித்த தகவல்கள் பரவிய நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.