
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று காலை முதல் தனது தொகுதியான கொளத்தூர் பகுதியில் ஆய்வு செய்து, மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
ரேஷன் கடைகளில் ஆய்வு செய்த அவர், பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை கொடுக்காவிட்டால், அந்தந்த ரேஷன் கடைகள் முன் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் உள்ள அகரம் ரேஷன் கடைகளில் திடீரென்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவரது தொகுதியான கொளத்தூரில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தபோது, “போதுமான உணவு பொருட்கள் கையிருப்பு இல்லை” என கடை ஊழியர் கூறினார்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கொளத்தூர், பெரம்பூர், திருவிக நகர், அகரம், பெரவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் ஆய்வு செய்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ரேசன் கடைகளில் அனைத்து பொருட்களும் முறையாக கிடைக்கவில்லை. ரேசன் கடைகளில் ஆய்வு செய்து அறிக்கை தர திமுக, எம்எல்ஏக்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். பொருட்கள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்தந்த பகுதி ரேஷன் கடைகள் முன்பு, பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பருப்பு, மற்றும் பாமாயில் தட்டுப்பாடு இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டபோது போதுமான உணவு பொருட்கள் கையிருப்பு இல்லை என ஊழியர் தெரிவித்தார்.
இதே நிலைமைதான் தமிழகம் முழுவதும் நீடிக்கின்றது. இதற்கு தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பொதுமக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு விளம்பரம் தேவைப்படுகிறது. இதன் மூலம் அவர் பிரபலம் அடைய ஆசைப்படுகிறார். இதனால், மக்களின் கவனம் அவர் மீது செலுத்த வேண்டும் என்பதற்காக திராவிட கட்சிகளை பற்றி அவர் பேசி வருகிறார்.
நெடுவாசல் மக்கள், மத்திய அரசை கண்டித்து, அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.