
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என முதல்வர் பழனிசாமியிடம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 19,500 வழங்க வேண்டும், ஓய்வூதியம், பணிக்கொடை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும், வருங்கால வைப்புத்தொகையை உரிய கணக்கில் சேர்க்க வேண்டும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த 7000 கோடி நிதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
13வது ஊதிய ஒப்பந்தத்தில் 2.57% ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2.44% என்ற ஊதிய உயர்வு வழங்குவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சில மறுத்துவிட்டன. சில சங்கங்கள் ஒப்புக்கொண்டன. ஆனால், தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சங்கங்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னறிவிப்பின்றி திடீரென நடத்தப்பட்ட இந்த வேலைநிறுத்தத்தால் பொதுமக்களும் பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நேற்றைய தினம் 20% பேருந்துகள் மட்டுமே தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டன.
போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும், கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை வேலைநிறுத்தம் தொடரும் என தெரிவித்து மூன்றாவது நாளாக போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஸ்டாலின் பேசியுள்ளார். போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், வேலைநிறுத்தத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என முதல்வரிடம் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.