கோமாளித்தனமான அமைச்சர்களின் பேச்சுகளுக்கு எல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள நான் விரும்பவில்லை என திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கும் தினகரனுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவும் என பல்வேறு கருத்து கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், தினகரன் அபார வெற்றி பெற்ற நிலையில், பிரதான எதிர்க்கட்சியான திமுக, டெபாசிட் கூட வாங்கமுடியவில்லை.
ஆர்.கே.நகர் தோல்வியையடுத்து, திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த கூட்டத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள், ஓகி புயல் பாதிப்பு, தற்போதைய அரசியல் சூழல், ஆர்.கே.நகரில் ஆற்றிய களப்பணிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், பெரும்பான்மை இல்லாத ஒரு மைனாரிட்டி அரசு தமிழகத்தில் உள்ளது. அதை மத்திய அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. சட்டசபை கூட்டத்தில், இந்த விவகாரத்தை எழுப்புவோம். ஓகி புயலால் பாதிக்கப்பட்டு 40 நாட்களுக்குப் பிறகு மத்திய குழு வந்து ஆய்வு நடத்துகிறது. எனினும், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.
பாஜக ஒரு மதவாத கட்சி. பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டதால் தான் ஆர்.கே.நகரில் தோற்றோம். இனிமேல் பாஜகவுடன் ஒட்டும் கிடையாது. உறவும் கிடையாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு முற்றிலும் முரணாக பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். இதுதொடர்பாக ஸ்டாலினிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஒவ்வொரு அமைச்சரும் கோமாளித்தனமாக பேசுவதற்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை என தெரிவித்துவிட்டார்.