
டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் எம்.பில். மேற்படிப்பு பயின்று வந்தவர் முத்து கிருஷ்ணன் . சேலத்தைச் சேர்ந்தவரான இவர் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு எம்.பில். மேற்படிப்புக்காக ஜேஎன்யு பல்கலைக்கழத்தில் கடந்த ஆண்டு சேர்ந்தார்.
இதனிடையே முத்து கிருஷ்ணன் நேற்று அவரது நண்பர்கள் அறையில்திடீரென தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவர் சாவில் மர்மம் உள்ளது என்றும், அது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் முத்துகிருஷ்ணன் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மர்ம மரணமடைந்த முத்துகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் இருந்து டெல்லி சென்று படிக்கும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என தெரிவித்தார்.
திருப்பூர் மாணவர் சரவணன், சேலம் முத்து கிருஷ்ணன் ஆகியோர் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளியை கண்டறிய வேண்டும் என்றும் அதற்கு பிரதமரிடம் முதலமைச்சர் உரிய அழுத்தம் கொடுக்க வலியுறுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.