ஸ்ரீமதி மரண வழக்கின் விசாரணையே முடியல.. அதுக்குள்ள நீதிமன்றமே ஒரு முடிவுக்கு வருவது சரி இல்லை! K. பாலகிருஷ்ணன்

By vinoth kumarFirst Published Sep 1, 2022, 6:54 AM IST
Highlights

சென்னை உயர்நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே நிரபராதிகள் எனவும், அவர்கள் அனைவரும் எவ்வித முகாந்திரமும் இன்றி கைது செய்யப்பட்டிருப்பது தேவையற்ற ஒன்று எனவும் தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. மாணவியின் மரணத்தில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமே இல்லை என சொன்னதோடு, அது தற்கொலை தான் என்பதாகவும் முடிவாக குறிப்பிடுகிறது. 

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் உள்ளிட்ட ஐந்து பேருக்கும் பிணை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒட்டு மொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்த்த மாணவி ஸ்ரீமதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள அனைவருக்கும் பிணை வழங்கப்பட்டிருப்பதையும், பிணை உத்தரவில் உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்துக்களையும் பார்க்கும் போது பெரும் அதிர்ச்சி ஏற்படுவதோடு, ஸ்ரீமதி மரணம் தொடர்பான பிரதான வழக்கு விசாரணை நிலைகுலைந்து பாதிப்பு ஏற்படுமோ என அச்சம் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க;- கள்ளகுறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் கொலையா ? தற்கொலையா ? நீதிமன்றம் பரபரப்பு தகவல்.!!

ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு பிணை கேட்டு   விண்ணப்பிக்கும் போது, நிலைமைகளை கணக்கில் கொண்டு பிணை வழங்கலாமா இல்லையா என்பதில் மட்டுமே நீதிமன்றம் முடிவு எடுக்கும். இதுதான் இதுநாள் வரையிலும்  கடைபிடிக்கப்பட்டு வந்த  நடைமுறையாகம். 2004ம் ஆண்டு சமன்லால் எதிர் உத்திர பிரதேச மாநில அரசு  வழக்கின் (896/2004) தீர்ப்பில்,  “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்படும் போது குற்றத்தின் தன்மையை கணக்கில் கொள்ள வேண்டுமெனவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டால் அவர்களால் சாட்சியங்கள் மற்றும் தடயங்களை அழிக்க வாய்ப்புள்ளதா என்பது போன்ற அம்சங்களை கணக்கில் கொள்ள வேண்டுமெனவும்” உச்சநீதிமன்றம் தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் “பிணை மனுவினை விசாரிக்கும் போது வழக்கு தொடர்பான தகுதி (Merits) குறித்து விவாதிக்க கூடாது” எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் அழுத்தமாக கூறியுள்ளது. இத்தகைய  வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகள் எதையும் இந்த பிணை மீதான விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்றம் பின்பற்றவில்லை என்பது மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளது.

இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே நிரபராதிகள் எனவும், அவர்கள் அனைவரும் எவ்வித முகாந்திரமும் இன்றி கைது செய்யப்பட்டிருப்பது தேவையற்ற ஒன்று எனவும் தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. மாணவியின் மரணத்தில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமே இல்லை என சொன்னதோடு, அது தற்கொலை தான் என்பதாகவும் முடிவாக குறிப்பிடுகிறது. முழுமையான விசாரணைக்கு முன்னதாகவே நீதிமன்றம் இம்முடிவுக்கு வந்துள்ளது குற்றவியல் நடைமுறைக்கு எதிரானதாகும். மேலும் இவ்வழக்கு தொடர்பான சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே நீதிமன்றம் இம்முடிவுகளுக்கு வந்திருப்பது அந்த வழக்கின் விசாரணையை சிதைக்கும்.

பிணை மனுவின் மீதான விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இத்தகைய உத்தரவின் மூலம்,  விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான பிரதான வழக்கு விசாரணையும் பாதிக்கப்படும்.  எனவே இதுபோன்ற முக்கியமான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிணை கோரி விண்ணப்பிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ள உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கருத்தில் கொண்டு, அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள பிணையை உடனடியாக ரத்து செய்ய வற்புறுத்தி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென  வலியுறுத்துகிறோம். மேலும், உரிய சட்டபூர்வமான நேர்மையான சிபிசிஐடி விசாரணையை  உறுதி செய்திட வேண்டும் என கேட்டுக் கொள்வதோடு, முறையான நீதிபரிபாலன முறை பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அழுத்தமாக வற்புறுத்துகிறது என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- ஸ்ரீமதி மரணம் பலாத்காரமும் இல்லை, கொலையும் இல்லை கூறிய நீதிமன்றம்.. தாய் எடுத்த அதிரடி முடிவு?

click me!