அணில்களால் மட்டும் மின்தடை வராது. புறா,காக்கா போன்றவற்றாலும் வரும். திமுகவுக்கு முட்டு கொடுத்த எஸ்.வி சேகர்.

By Ezhilarasan BabuFirst Published Jun 24, 2021, 10:26 AM IST
Highlights

அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்னது தவறில்லை. ஆனால் அணில்களால் மட்டும் மின் தடை வராது. புறா,காக்கா போற்ற பறவைகள் டிராஸ்பார்மர் பியூஸ் கம்பியில் அமரும் போது ஷார்ட் ஆகி மின் தடை ஏற்படும். 

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்பட்டதில் இருந்து அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்த மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 10 நாட்களில் மின் பராமரிப்பு பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்பட்டு மின்வெட்டு இல்லாத நிலை ஏற்படுத்தப்படும் என கூறினார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அதிமுக ஆட்சியின் போது எந்த பராமரிப்பு பணிகளும் செய்யப்படவில்லை என்றும், சில இடங்களில் செடிகள் வளர்ந்து கம்பிகளோடு மோதும் போது அதில் அணில்கள் ஓடும், அந்த அணிகள் ஓடும்போது இரண்டு லைன்கள் ஒன்றாகி மின்சார தடை ஏற்படும் என தெரிவித்தார். அணில் ஆல் மின்வெட்டு ஏற்படுகிறது என்ற அவரின் கருத்து சமூகவலைதளத்தில் வேகமாக பரவியது. பலரும் அமைச்சரின் கருத்தை கடுமையாக விமர்சித்து வந்தனர். 

அமைச்சரின் இக் கருத்தை கடுமையாக விமர்சித்த பாமக நிறுவனர் ராமதாஸ், மின்கம்பிகளில் கொடி படர்ந்து அணில் ஓடுவதால் மின்தடை ஏற்படுகிறது:  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விஞ்ஞானம்... விஞ்ஞானம்... சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின்தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும், ஒரு வேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ என தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலடித்து இருந்தார்.  இந்நிலையில் ராமதாஸுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டிரான்ஸ்பார்மரில் அணியில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை, அவை மின் கம்பிகளில் உரசுகின்றன. அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில்  படுவதாலும் கூட சில இடங்களில் மின்தடை ஏற்படுகின்றன என்று, இதனையும் ஒரு காரணமாக கூறினேன், அணில் மட்டும் காரணமென நான் சொன்னதாக சித்தரிக்கும் ராமதாஸ் அவர்கள் தன் கூட்டணி கட்சியான அதிமுகவுடன் ஏன் பராமரிப்பு பணிகளை செய்யவில்லை என கேட்டு இருக்கலாமே என்றார். 

அணில்கலாளும் மின் தடை ஏற்படுகின்றது என்பது உலகில் மின் வாரியங்கள் சந்திக்கும் பெரும் சவால்.. என புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். பறவைகள் அணில்கள் கிளைகளுக்கு இடையே தாவும்போது மின்தடை ஏற்படுகிறது, களப்பணியாளர்கள் உயிரை பணயம் வைத்து சரி செய்வதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள், சவால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பெரியதன்று, திட்டமிடல், களப்பணி மூலம் உண்மையான மின்மிகை மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம் என பதிவிட்டுள்ளார் இதற்கு பல தரப்பிலிருந்து ஆதரவும் விமர்சனமும் எழுந்து வருகிறது.  இந்நிலையில் எப்போதும் திமுகவை மிக மோசமாக விமர்சிக்க கூடிய பாஜக ஆதரவாளர், நகைச்சுவை நடிகர் எஸ்.வி சேகர், அமைச்சர் செந்தில்பாலாஜியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதில் தவறு ஒன்றும் இல்லை எனவும் கடந்த 10 ஆண்டுகளாக எங்கள் மயிலாப்பூர் ஏரியாவில் பல தடவை மின்தடை ஏற்பட்டுள்ளது ஆனால் உடனே அதை சரி செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். 

அவர்  பதிவிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்னது தவறில்லை. ஆனால் அணில்களால் மட்டும் மின் தடை வராது. புறா,காக்கா போற்ற பறவைகள் டிராஸ்பார்மர் பியூஸ் கம்பியில் அமரும் போது ஷார்ட் ஆகி மின் தடை ஏற்படும். அது அங்கேயே இறந்து விட்டால் மின் வாரிய ஊழியர்தான் வந்து சரி செய்ய முடியும்.கடந்த10 ஆண்டுகளில், எங்கள் மயிலாப்பூர் ஏரியாவில் பல தடவை மின் தடை ஏற்பட்டுள்ளது. ஆனால் உடனே சரி செய்யப்பட்டுள்ளது. Pl check with TNEB Engineers.HATS OFF TO TNEB LINE WORKERS. என பதிவிட்டுள்ளார். 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது பாஜகவின் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என பாஜக மீது தொடர்ந்து அதிருப்தி தெரிவித்துவரும் எஸ்.வி சேகர் தற்போது திடீரென திமுக அமைச்சரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பது பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒருவர் உங்கள் போக்கில் மாற்றம் தெரிகிறது, என்று பலர் சொல்கிறார்கள் அதை நீங்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள், தமிழகம் முழுவதற்குமாக ஒரு அமைச்சர் அணிலை குற்றம் சாட்டுகிறார். உங்களுடைய கருத்து அதை ஆதரிக்கும் வகையில் உள்ளது, எனக்கு வெட்கமாக இருக்கிறது என ஒருவர் பதிவு செய்துள்ளார். 
 

click me!