பலா, முந்திரி மற்றும் வாழைப் பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஸ்பெஷல் ஒயினுக்கு கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. அம்மாநில குடிமகன்களுக்கு ஹேப்பி றியூசாக இது அமைந்துள்ளது
கேரளாவில் கிடைக்கும் பழங்களில் இருந்து ஒயின் மற்றும் குறைந்த அளவு ஆல்கஹால் வீதம் கொண்ட மதுபானம் தயாரிப்பது குறித்து கேரள விவசாய பல்கலைக்கழகமானது ஆய்வு செய்து வந்தது. சமீபத்தில் அது தனது அறிக்கையை மாநில அரசிடம் தாக்கல் செய்தது.
இந்நிலையில் இன்று மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், பல்கலைக்கழகம் தாக்கல் செய்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதன்படி கேரளாவில் கிடைக்கும் பலா, முந்திரி மற்றும் வாழை ஆகியவற்றில் இருந்து ஒயின் மற்றும் குறைந்த அளவு ஆல்கஹால் வீதம் கொண்ட மதுபானங்களை தயாரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பானங்களைத் தயாரிக்கும் திறனுள்ள உற்பத்தி கூடங்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில் மாநில கலால் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே இந்தியத் தயாரிப்பு அந்நிய மதுவகைகள் மற்றும் பீர் விற்பனையின் மூலம் 2018-19ஆம் நிதியாண்டில் கேரள மாநில அரசுக்கு ரூ. 14,504.67 கோடி வருவாய் கிடைத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.