கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பிரத்யேக ஊர்தி..!! அதிரடி மேல் அதிரடி காட்டும் அதிமுக அரசு..!

By Ezhilarasan BabuFirst Published Aug 31, 2020, 12:38 PM IST
Highlights

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் காலியாக உள்ள 138 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு,  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

கொரோனா காலத்தில் உரிய நேரத்தில் நோயாளிகள் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூடுதலாக 118 ஊர்தி வாகனங்களின் சேவையை சென்னை தலைமை செயலத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இந்த  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்,  தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள்  அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்கால அடிப்படியில்  எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் அழைத்து செல்வதற்காக அவசர ஊர்தி பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. தற்பொழுது தமிழகம் முழுவதும் 1,005 அவசர ஊர்திகள் இயங்கி வரும் நிலையில், இந்த சேவையை மேலும் விரிவுப்படுத்த தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் கீழ் , 108 அவசர கால ஊர்தி சேவைக்காக , 103 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 500 அவசரகால ஊர்திகளை கூடுதலாக கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாக,  முதற்கட்டமாக 118 ஊர்திகளின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். 

  

இதில் தமிழக அரசு சார்பில் 20.65 கோடி ரூபாய் மதிப்பில் 90 வாகனங்களும், தனியார் நிறுவனம் சார்பில் 1.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18 வாகனங்களும்,  3.09 கோடி மதிப்பில் 10 ரத்த தான ஊர்திகளும் பயன்பாட்டிற்காக துவங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இவற்றில் BLS எனப்படும் அடிப்படை வசதி கொண்ட அவசரகால ஊர்திகள் மற்றும் ALS எனப்படும் மேம்படுத்தப்பட்ட அவசரகால ஊர்திகளும் செயல்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அவசரகால ஊர்திகளில் செயற்கை சுவாச கருவி, ஆக்ஸிஜன் அளவீட்டு கருவி, மின் அதிர்வு சிகிச்சை கருவி போன்ற உயர்தர கருவிகளுடன் 60 மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை கையாள அவசரகால மேலாண்மை தேர்ச்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஊர்திகள் இன்று முதல் செயல்பட இருப்பதாகவும்,  தமிழகம் முழுவதும் பிரித்து அனுப்பப்பட உள்ளதாகவும், சில தினங்களில் மீதமுள்ள அவசர ஊர்திகளும் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மொத்தம் 1005 ,108 அவசர ஊர்திகள் இயங்கி வருகிறது. இதில் 65 பச்சிலம்  குழந்தைகளுக்கான ஊர்திகளும், 871 அடிப்படை அவசரகால ஊர்தி மற்றும் மலையோரப் பகுதிகளுக்கான ஊர்தி களும், 65 மேம்பட்ட அவசர கால ஊர்திகளும், 41 இருசக்கர வாகன ஊர்திகளும் இயங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.அதன் தொடர்ச்சியாக, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் காலியாக உள்ள 138 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு,  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 

மேலும், தேசிய தர உறுதி திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சுகாதார சேவைகள், சுகாதார குறியீடு, முறையான பராமரிப்பு மற்றும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகளின் கருத்துக்களை பெற்று, தேசிய குழு நிபுணர்கள் ஆய்வு செய்து, தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட கூடிய அரசு மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு பரிசுத் தொகையும் தேசிய சான்றிதழ்களும் வழங்கி பாராட்டி வருகிறது. இந்த பரிசுத்தொகை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2019-20ம் ஆண்டிற்காக, காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, தாம்பரம்,  ஆம்பூர்,  திருப்பத்தூர், சோளிங்கர்,  அரூர்,  திருச்செந்தூர்,அருப்புக்கோட்டை, பரமக்குடி, ஸ்ரீரங்கம்,  மேட்டுப்பாளையம், ராசிபுரம், ஓசூர் அரசு மருத்துவமனைகள் என மொத்தம் 13 அரசு மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய தரச்சான்றிதழுடன்  கூடிய பரிசுத் தொகையான 2 கோடியே 53 லட்சத்து 42 ஆயிரத்து 732 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகையினையும் சான்றிதழ்களையும் அரசு மருத்துவமனைகளின் தலைமை மருத்துவ அலுவலரிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
 

click me!