சட்டப் பேரவையில் குடிநீர் பிரச்னைக்கு சிறப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் ! திமுக அதிரடி கோரிக்கை !!

By Selvanayagam PFirst Published Jun 20, 2019, 10:12 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் நாளன்று மக்களின் குடிநீர் பிரச்சினைகள் குறித்துஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காண சிறப்பு தீர்மானம் கொண்டுவந்து அதிமுக அரசு விவாதிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , வரும் 28 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும்" என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டம் துவங்கும்  அன்றைய தினமே தமிழகத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பிரச்சினை குறித்து முழுமையாக விவாதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

காலிக்குடங்களுடன் அலையும் தாய்மார்கள், தண்ணீருக்காக மறியல் போராட்டங்களில் ஈடுபடும் பொது மக்கள் என எங்கும் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருவதை அரசு முதலில் உணர வேண்டும் என தெரிவித்துள்ளார்..

பள்ளிகள்,  கல்லூரிகள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், ஐ.டி கம்பெனிகள் என்று அனைத்து மட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வரலாறு காணாத தண்ணீர் நெருக்கடி ஏற்கனவே நலிவடைந்துள்ள மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் மேலும் சீர்குலைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. 

இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகும், குடிநீர் பற்றாக்குறை என்பது வதந்தி, குடிநீர் பிரச்சினை என்பது  உருவாக்கப்படும் ஒரு மாயத் தோற்றம் என்றெல்லாம் உள்ளாட்சித்துறை அமைச்சர் உள்ளிட்ட மற்ற அமைச்சர்களும், முதலமைச்சரும் பொறுப்பற்ற முறையில் பேசி வருவது மிகுந்த வேதனைக்குறியது மட்டுமல்ல- போராடும் மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துவது ஆகும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சாதாரண மக்கள் தண்ணீருக்காக அங்கும் இங்கும் அலைந்து போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், அமைச்சர்களின் இல்லங்களுக்கு மட்டும் தண்ணீர் டேங்கர் லாரிகள் மூலம் தாராளமாக சப்ளை செய்யப்படுகின்றன என்று வரும் செய்திகள் மக்களுக்கு எரிச்சலையே ஏற்படுத்தும். 

குடிநீர் பிரச்சினை யை சமாளிக்க கேரள மாநில அரசு வழங்க  முன் வந்த தண்ணீரை ஏற்க மறுத்துள்ளது  கண்டனத்திற்குரியது. கேரள முதல்வர்  அளிக்க முன் வந்த தண்ணீரை அ.தி.மு.க ஆரசு உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்..

சென்னை மாநகரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும்  நிலவும் கடுமையான குடிநீர் பஞ்சம் குறித்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறியவும், குடிநீர் பிரச்சினையை சமாளிக்கத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும், முதலமைச்சரே சட்டமன்றக் கூட்டத்தொடர் துவங்கும் 28 ஆம் தேதியே ஒரு சிறப்புத் தீர்மானத்தை அவையில் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

click me!