நம்பிக்கையை பொய்யாக்கி மறைந்த தேமதுரக் குரலோன் எஸ்.பி.பி... துணை முதல்வர் ஓ.பி.எஸ் வேதனை..!

By Thiraviaraj RMFirst Published Sep 25, 2020, 3:17 PM IST
Highlights

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.  
 

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் மடலில், ‘’தேமதுரக் குரல் கொண்டு இவ்வையகத்தை மகிழ்வித்த பாடகர் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயர் அடைந்தேன். எஸ்.பி.பி. மறைந்தாலும் கானக்குரல் கொண்டு அவர் பாடிய பாடல்கள் என்றென்றும் மறையாது ஒலிக்கும். வைரஸ் கொடுநோய் தோற்றால் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் அபாய கட்டத்தை தாண்டி முன்னேற்றம் பெற்று வருகிறார் என்ற தகவலைக் கேட்டு அவர் நலம் பெற்று மீண்டும் வருவார் என நம்பிக்கையுடன் இருந்த நேரத்தில் அவர் காலமானார் என்ற செய்தியைக் கேட்டு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பரிதவிக்கின்றனர்.

 எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையிசை உலகில் ஒரு சகாப்தமாக விளங்கினார்.  இன்னிசை தேன் குரலால் லட்சக்கணக்கான இசை ரசிகர்களை மட்டுமல்ல, அவரது பாடலை கேட்கும் அனைவரையும் ஈர்த்து தன் வசமாக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவராக திகழ்ந்தார். பாடலுக்காவே பிறந்தவர் எஸ்.பி.பி என்று சொல்லும் அளவிற்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி அதிக எண்ணிக்கையிலான பாடலை பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில் சாதனை படைத்தவர்.

 தமிழ் மொழியில் மட்டுமின்றி மொத்தம் நான்கு மொழிகளில் பாடல்கள் பாடி தேசிய விருது பெற்ற ஒரே பாடகர் என்ற பெருமைக்கு உரியவர். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரே நாளில் 15க்கும் மேற்பட்ட பாடல்களைப் பல்வேறு மொழிகளில் பாடி ஒளிப்பதிவு செய்து சாதனை சின்னமாக திகழ்ந்தார். பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல் பாடுவது மட்டுமின்றி, நடிப்பிலும் தனி முத்திரை பதித்தவர். 72 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.

பாலசுப்பிரமணியம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் கோலோச்சியவர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா ஆகியோரது அன்பை பெற்று அவர்கள் நடித்த படங்களில் சிறப்பான பாடல்களை பாடியவர். தனது அற்புத குரல் வளத்தால் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் ஈர்த்து இந்திய அளவில் எண்ணிலடங்கா இசை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். அவரது மறைவு நமக்கெல்லாம் சொல்லொணாத் துயரத்தை அளித்திருக்கிறது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைந்தாலும், காண குரல் கொண்டு அவர் பாடிய பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது பெருமையை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். சீரும் சிறப்பும் பேரும் புகழும் கொண்டு திரையிசை உலகில் தனக்கென ஒரு தனி இடம் கொண்டிருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் வலிமை மன வலிமை பெற இறைவனை வேண்டுகிறேன். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை இறைஞ்சுகிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார். 

click me!