நடுத்தர குடும்பங்களின் வீடு கட்டும் கனவில் மண்.. ஒரு மூட்டை சிமெண்ட் விலை 70 முதல் 100 ரூபாய் உயரும் அபாயம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 8, 2021, 4:05 PM IST
Highlights

மேலும் இந்த விலை உயர்வுக்கு காரணம் கட்டுமான பொருட்களின் மீது திரும்பப் பெற இயலாத வகையில், ஆடம்பர பொருளுக்கு இணையாக விதித்துள்ள சரக்கு மற்றும் சேவை வரியும், கட்டுமான பொருட்களை உற்பத்தி செய்வதற்கு தேவையான நிலக்கரி, எரிபொருள் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வும், தங்கு தடையும், பற்றாக்குறையும் என தெரிவிக்கின்றனர்.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் வீடு கட்டும் பொதுமக்கள், கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்களின் நலன் கருதி கட்டுமான பொருட்களின் தொடர் விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- சமீபகாலமாக கட்டுமானத்துக்கு தேவையான முக்கிய மூலப் பொருட்களான சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் கட்டுக்கடங்காத விலை உயர்வால் கட்டுமானத்துறை மிகவும் பாதிக்கப்பட்டு அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. 

குறிப்பாக சிமெண்ட் விலை உயர்வு சம்பந்தமாக ஏற்கனவே அரசு தரப்பில் சிமெண்ட் உற்பத்தியாளர்களை அழைத்துப் பேசிய பிறகும் சிமெண்ட் விலை மூட்டை ஒன்றுக்கு ₹.70 ரூபாய் முதல் ₹.100 ரூபாய் வரை உயர்ந்த நிலையில், மேலும் தற்போது மூட்டை ஒன்றுக்கு ₹.60 ரூபாய் உயர வாய்ப்புள்ளது என்ற சிமெண்ட் உற்பத்தியாளர்களின் செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் மேலும் சிமெண்ட், கம்பி, செங்கல், மணல், ஜல்லி, மரச்சாமான்கள், சானிட்டரிவேர், எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் உட்பட அனைத்து கட்டுமானப் பொருட்களும் மிகக் கடுமையான விலை உயர்வால், மேலும் கட்டுமானத்துறை நிலைகுலைந்திருக்கிறது. 

இதையும் படியுங்கள்:  தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. 12 ஆம் தேதி வரை ரொம்ப கவனமா இருங்க.. பிரிச்சி மேயப்போகுதாம்.

மேலும் இந்த விலை உயர்வுக்கு காரணம் கட்டுமான பொருட்களின் மீது திரும்பப் பெற இயலாத வகையில், ஆடம்பர பொருளுக்கு இணையாக விதித்துள்ள சரக்கு மற்றும் சேவை வரியும், கட்டுமான பொருட்களை உற்பத்தி செய்வதற்கு தேவையான நிலக்கரி, எரிபொருள் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வும், தங்கு தடையும், பற்றாக்குறையும் என தெரிவிக்கின்றனர். கட்டுமான பொருட்களின் கட்டுக்கடங்காத விலை உயர்வுகளால் தனியார் கட்டுமான நிறுவனங்களும், அரசின் திட்டத்தின் கீழ் வீடு கட்டி வரும் சாதாரண, சாமானிய, பாமர மக்களும், மேலும் வங்கிகளில் கடன் வாங்கி வீடு கட்டி வரும் நடுத்தர வர்க்கத்தினரும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விலை உயர்வால் தமிழகத்தில் பல இடங்களில் வீடு கட்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டும் நிலை ஏற்படும். 

இதையும் படியுங்கள்: கடலில் மூழ்கிய படகு.. தலையில் கை வைத்து உட்கார்ந்த சீமான்.. அரசுக்கு கண்ணீர் கோரிக்கை.

இதனால் கட்டுனர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தப்படி குறித்த நேரத்தில் திட்டங்களை முடித்து ஒப்படைக்க முடியாத நிலை ஏற்படும். மேலும் கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு ஆளாகும் நிலையும், கட்டுமானத் தொழில் முடங்கும் நிலையும், சாதாரண, சாமானிய மக்களின் சொந்த இல்லக் கனவுகள் நிறைவேறாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, ஏற்கனவே அதல பாதாளத்தில் இருக்கும் கட்டுமான தொழிலை மேலும் நசுக்கும் வகையில் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து இருக்கும் கட்டுமான பொருட்களின் கட்டுக்கடங்காத விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுத்து, தகுந்த தீர்வினை விரைவாக ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
 

click me!