முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்குகள் மீதான விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜரானார்.
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்குகள் மீதான விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜரானார்.
கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின், தமிழக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இதேபோல், கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து டுவிட்டரில் சில கருத்துகளை அவர் பதிவிட்டிருந்தார். இதேபோல், முதலமைச்சரை விமர்சித்து பேசியது குறித்த செய்தி முரசொலி நாளிதழில் வெளியானது.
இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் 6 அவதூறு வழக்குகள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.வுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. அந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்ததால் சிறப்பு நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜரானார்.
அப்போது மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரும் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜனவரி 29-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.