எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர், காமராஜ் போன்ற முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக்கியுள்ளது. அவர்களுக்கு எதிரான புகாரில் ஆதாரங்களை திரட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே விரைவில் அவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர நடவடிக்கைகள் மும்முரமாகியுள்ளன.
கடந்த அதிமுக ஆட்சியில் அதிகாரத்துடன் வலம் வந்த அமைச்சர்கள் சிலரை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை குறி வைத்துள்ள நிலையில் முன்னாள் முதலமைச்சர் விரைவில் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர், காமராஜ் போன்ற முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக்கியுள்ளது. அவர்களுக்கு எதிரான புகாரில் ஆதாரங்களை திரட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே விரைவில் அவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர நடவடிக்கைகள் மும்முரமாகியுள்ளன. கடந்த ஆட்சிகளை போல் வீடு தேடிச் சென்று கைது செய்யும் முறையை இந்த முறை லஞ்ச ஒழிப்புத்துறை பின்பற்றாது என்கிறார்கள். முன்னாள் அமைச்சர்களை முதலில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளது.
இதனை அடுத்து நேரில் ஆஜராகும் அவர்களை விசாரரைண முடிந்து கைது செய்து சிறையில் அடைப்பது தான் தற்போதைய திட்டம் என்கிறார்கள். இதே போல் சம்மனுக்கு எதிராக நீதிமன்றம் செல்பவர்களை முன்ஜாமீன் இல்லை என்று நீதிபதிகள் விரட்டிய பிறகு பிடித்து உள்ளே போடவும் திட்டமிடப்பட்டுள்ளது என்கிறார்கள். ராஜேந்திர பாலாஜி அல்லது எஸ்பி வேலுமணி ஆகிய இரண்டு பேரில் ஒருவர் தான் திமுக அரசின் முதல் குறி என்கிறார்கள். ஏனென்றால் கடந்த ஆட்சி காலத்தில் ஸ்டாலினுக்கு நேரடியாக சவால் விடுத்தவர்கள் இவர்கள் இரண்டு பேர் தான். அதிலும் ராஜேந்திர பாலாஜி ஸ்டாலினை ஒருமையில் பேசியதை அக்கட்சிக்காரர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார்கள்.
அந்த வகையில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான ஆவின் பால் முறைகேடு புகார்கள் தூசி தட்டப்பட்டுள்ளன. இதே போல் மற்ற முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீயாய் வேலை பார்த்து வருகின்றனர். ஊழல் புகார்களில் முன்னாள் அமைச்சர்கள் சிறை செல்வதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை என்கிறார்கள். கடந்த அதிமுக ஆட்சியின் போது திமுக அமைச்சர்களாக இருந்தவர்களை ஊழல் வழக்குகளில் கைது செய்யவில்லை. மாறாக நில அபகரிப்பு போன்ற வழக்குகளில் கைது செய்தார்கள். அந்த வகையில் தற்போதும் அது போன்ற வழக்குகள் என்றால அமைதியாக இருக்கலாம் ஆனால் ஊழல் வழக்குகள் என்றால் இமேஜ் டேமேஜ் ஆகும் என்று எடப்பாடி கருதுகிறார்.
மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கைகளை மோப்பம் பிடித்துள்ள முன்னாள் அமைச்சர்கள் தங்களுக்கு உதவுமாறு எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக் கதவைத்தான் தட்டுகிறார்கள். இந்த சமயத்தில் அவர்களுக்கு உதவினால் கட்சியின் தனது பிடிமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும் என்று எடப்பாடி கருதுகிறார். எனவே திமுகவின் லஞ்ச ஒழிப்புத்துறை அஸ்திரத்தை எதிர்கொள்ள டெல்லி உதவியை நாட எடப்படி திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி உள்துறை அமைச்சர் அமித் ஷா வரை அதிகாரத்தில் உள்ளவர்களுடன் எடப்பாடி பழனிசாமி தற்போதும் தொடர்பில் உள்ளதாகவே சொல்கிறார்கள்.
இந்த தொடர்பை உறுதிப்படுத்த மறுபடியும் டெல்லி செல்ல எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். பிரதமர்மோடியை சந்திக்க முடியவில்லை என்றாலும் அமித் ஷாவை சந்திக்கவும், ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசவும் எடப்பாடியார் திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். அவர்களை சந்தித்து திமுகவின் பெருந்தலைகள் சிலருக்கு சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மூலம் செக் வைக்கும் பட்சத்தில் தனது முன்னாள் அமைச்சர்களை காப்பாற்ற முடியும் என்று எடப்பாடி கருதுகிறார். இதற்காகவே அவர் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.