கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவி ஏற்று இத்தனை நாளாகியும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யாததற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பியுள்ள சித்தராமையா, இது ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா என குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி அரசை பாரதிய ஜனதா கவிழ்த்தது. இதைத்தொடர்ந்து எடியூரப்பா தலைமையில் பாரதிய ஜனதா புதிய ஆட்சி அமைத்துள்ளது.
குமாரசாமி அரசுக்கு எதிராக செயல்பட்ட 14 பேரின் எம்.எல்.ஏ. பதவியை சபாநாயகர் பறித்து விட்டார். அவர்களுக்கு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக பாரதிய ஜனதா சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. அதில், அமைச்சர் பதவி தருவதாக அளித்த வாக்குறுதியும் ஒன்று.
பாரதிய ஜனதா பதவி ஏற்றபோது, எடியூரப்பா மட்டும்தான் பதவி ஏற்று கொண்டார். அமைச்சரவை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ஒருவாரத்திற்கு மேலாகியும் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருக்கிறது.
அதிருப்தி எம்எல்ஏக்கள் உட்பட 60 பேர் அமைச்சர் பதவி வேண்டும் என அடம் பிடிப்பதால்,புதிய அமைச்சரவை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாள்களிடம் பேசிய சித்தராமையா ‘இதற்கு முந்தைய அரசு மெஜாரிட்டியை நிரூக்க வேண்டும் என கவர்னர் கடிதம்மேல் கடிதம் அனுப்பினார்.
தற்போது பல்வேறு மாவட்டங்கள் வறட்சி மற்றும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் ஒருவர் மட்டுமே இருக்கும் நிலையில் அங்குள்ள மக்களின் நிலை குறித்து அவர் அறிந்திருக்கவில்லையா? என கேள்வி எழுப்பினார்.
தற்போது வரை நிர்வாக இயந்திரம் முடங்கிப்போகியுள்ளது. இது ஜனநாயகமா? சர்வாதிகாரமா?. எடியூரப்பா முதல்வராக எப்படி துடித்தாரோ, அதேபோல் அமைச்சரவை விரிவாக்கத்திற்கு ஏன் அவசரம் காட்டவில்லை என சித்தராமையா தெரிவித்துள்ளார்.