டி.டி.வி.தினகரனை சந்தித்ததற்காக எம்.எல்.ஏ பதவியை பறிப்பதா? என கள்ளக் குறிச்சி எம்.எல்.ஏ பிரபு கேள்வி எழுப்பியுள்ளார்.
டி.டி.வி.தினகரனை சந்தித்ததற்காக எம்.எல்.ஏ பதவியை பறிப்பதா? என கள்ளக் குறிச்சி எம்.எல்.ஏ பிரபு கேள்வி எழுப்பியுள்ளார்.
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகியோர் மீது அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து எம்எல்ஏ பிரபு ’’சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினால், அதற்கு தகுந்த பதில் அளிப்பேன். இப்போதும் நான் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,தான். தெரிந்தவர்களை நான் சந்திக்க கூடாதா? டி.டி.வி.தினகரனை போய் பார்ப்பது எப்படி தவறாகும்? இதில் என்ன கட்சி விதிமீறல் இருக்கிறது? என்றார்.
எம்எல்ஏ கலைச் செல்வனிடம் கேட்டபோது, ’’எல்லா இடங்களிலும் நாங்கள் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறோம். அரசுக்கு எதிராக எங்கும் செயல்படவில்லை’’ எனக் கூறினார். எம்எல்ஏ பிரபு அமமுக மாநில தொழில்நுட்ப பிரிவு செயலாளராக இருக்கிறார்.
அதேபோல் ரத்தினசபாபதி கூறுகையில், ‘’எனது எம்.எல்.ஏ பதவியை விட்டு தூக்குவதால் கவலையும் இல்லை. அமமுகவில் பொறுப்புக் கொடுத்ததற்காக வருத்தமும் இல்லை. இரு தரப்பும் ஒற்றுமையாக இருந்து எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வளர்த்த கட்சியை வளர்க்க வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சியை களையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதனை சபாநாயகரை சந்திக்கும்போது நேரில் விளக்குவேன்’’ என அவர் தெரிவித்தார்.