மேற்கு வங்காள மாநிலத்தில் கம்யூனிஸ்டுகளின் ஆட்சிக்கு முடிவு கட்டிய பெண் புலி, மம்தா பானர்ஜி என, சிவசனா கட்சி புகழாரம் சூட்டி உள்ளது.
மம்தாவுடன் சந்திப்பு
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த சில நாட்களுக்கு முன் தெற்கு மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் அக்கட்சியின் சாம்னா பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில், மம்தா பானர்ஜி பற்றி கூறப்பட்டு இருப்பதாவது-
25 வருட ஆட்சிக்கு முடிவு
மம்தாவின் சில முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கலாம். சிவசேனாவுடன் ஒத்து போகாத சில விசயங்களும் இருக்கலாம். ஆனால் அவரது மாநிலத்தில், சிவசேனா தொடர்ந்து எதிர்த்து போராடும் கம்யூனிஸ்டுகளை அவர் ஒழித்துள்ளார்.
காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா செய்ய முடியாத விசயத்தினை பெண் புலி மம்தா செய்துள்ளார். கம்யூனிஸ்டுகளின் 25 வருட ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளார்.
மக்கள் நம்பிக்கை
இதனை செய்வதற்காக அவர் மின்னணு இயந்திரங்களை சேதப்படுத்திடவோ அல்லது ஓட்டுகளை வாங்கவோ இல்லை. மக்கள் அதிக நம்பிக்கையுடன் தலைமையேற்று செல்லும் பொறுப்பினை அவருக்கு வழங்கியுள்ளனர்.
ஆனால் மேற்கு வங்காளத்தில் வளர்ச்சியை தடுத்து மாநில அரசுக்கு நிதி நெருக்கடிகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.