வீட்டுச் சுவரை உடைத்து  சோதனை செய்து அதகளம் பண்ணிய வருமான வரித்துறை…. செய்யாத்துரையின் ரகசியங்கள் அம்பலம் !!

Asianet News Tamil  
Published : Jul 18, 2018, 12:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
வீட்டுச் சுவரை உடைத்து  சோதனை செய்து அதகளம் பண்ணிய வருமான வரித்துறை…. செய்யாத்துரையின் ரகசியங்கள் அம்பலம் !!

சுருக்கம்

seyyadurai house walls broken and raid by IT dept

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள காண்ட்ராக்டர் செய்யாத்துரையின் பூர்வீக வீட்டின் சுவரை உடைத்து அதிரடியாக சோதனையிட்ட வருமான வரித்துறையினர், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த  ஏராளமான ஆவணங்கள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றில் முதல்நிலை ஒப்பந்ததாராக பணிகள் செய்து வருபவர், செய்யாத்துரை. இவரது பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கீழமுடிமன்னார்கோட்டை என்ற கிராமம்.

ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த இவருக்கு, கொலை செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணனின் நட்பு கிடைத்தது. இதை வைத்துக் கொண்டு நெடுஞ்சாலைத் துறையில் சிறுசிறு காண்ட்ராக்ட்டுகளை எடுத்து செய்த வந்த இவர் பின்னாளில் தற்போதுள்ள அதிகார வட்டத்திற்கு மிகுந்த நெருக்கமானார் என கூறப்படுகிறது.

கீழமுடிமன்னார்கோட்டை  கிராமத்தில் உள்ள  எஸ்.பி.கே. நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், சென்னை, அருப்புக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களில் காண்டிராக்டர் செய்யாத்துரைக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், தங்கும் விடுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, கீழமுடிமன்னார்கோட்டையில் உள்ள செய்யாத்துரையின் பூர்வீக வீடு மற்றும் தோட்டங்களில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

செய்யாத்துரையின் வீட்டுக்கு வந்த அவர்கள், இரும்புக்கேட்டை உடைத்து வீட்டுக்கு உள்ளே சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வீட்டுக்குள்  உள்ள ஓர் அறையின் சில சுவர்களையும் இடித்து சோதனை நடத்தினார்கள்.  அதில்  ஏராளமான ஆவணங்கள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் போன்றவை சிக்கியதாக கூறப்படுகிறது.

சோதனையின் போது சில ஆவணங்களை கையில் எடுத்து வைத்துக்கொண்டு, அவற்றின் விவரங்கள் பற்றி செய்யாத்துரையிடமும் அவருடைய மகன்கள் கருப்பசாமி, பாலசுப்பிரமணியன் ஆகியோரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பின்பு, கைப்பற்றப்பட்ட தங்க நகைகள், வைரங்களை கணக்கிடும் பணிக்காக நகை மதிப்பீட்டாளர் வரவழைக்கப்பட்டார். அவர் வந்து மதிப்பிடும் பணியை மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து செய்யாத்துரையின் மகன் கருப்பசாமியை விருதுநகர் ரோட்டில் உள்ள வங்கிக்கு வருமான வரி அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். சுவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய பைல்களில் என்ன இருக்கிறது ? யாருடைய பெயர்கள் எல்லாம் இருக்கின்றன ? யார் யார் ? இதில் மாட்டப் போகிறார்கள் போன்ற விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிபார்க்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

SIR ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தல்.. நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கமல்ஹாசன்.. அதிர்ந்த ஆளுங்கட்சி!
அஜித் பவார்: வெறும் 5 நாட்கள் முதல் 2.5 ஆண்டுகள் வரை பதவி. 6 முறை து.முதல்வர்..! அரசியலின் தாதாவானது எப்படி..?