
கோவை சிலிண்டர் வெடி விபத்து
கோவையில் சிலிண்டர் வெடி விபத்து நடைபெற்ற இடத்தில் ஆணி, பால்ராஸ் குண்டுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை விரைவுபடுத்தியதில் இறந்தது ஜமேசா முபின் என தெரியவந்துள்ளது. இவரிடம் என்ஐஏ கடந்த 2019 ஆம் ஆண்டே விசாரணை நடத்தியுள்ளது. இதனையடுத்து அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் வெடிபொருட்களுக்கு தேவையான பொட்டாட்சியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற வெடி பொருட்கள் தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து சிலிண்டர் வெடி விபத்து தொடர்பாக விசாரணை மேற்கோண்ட போலீசார் 5 பேரை கைது செய்தனர். இந்தநிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை மூடி மறைப்பதற்காக காவல்துறையினர் சிலிண்டர் வெடிப்பு என கூறி மறைக்க முயல்வதாக குற்றம்சாட்டினார். குண்டு வெடிப்பு தொடர்பாக முதலமைச்சர் அமைதி காப்பதாக தெரிவித்தார்.
மதக்கலவரத்திற்கு திட்டம்
இந்தநிலையில் இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதனால் மக்கள் அடித்துக் கொள்ளமாட்டார்களா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது. கோவையில் சம்பவம் நடந்தவுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி டிஜிபி சம்பவ இடத்திற்கு சென்றார்.
கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களிடம் எந்தச் சலனமும் இன்றி, தீபாவளி கொண்டாட்டத்தில் சிறு தொய்வும் ஏற்பட்டுவிடாமல் அரசும், காவல்துறையும் சிறப்பாகச் செயல்பட்டன. அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும். ‘நீங்க 2000 வாங்கிக்குங்க, 3000 வாங்கிக்குங்க’ என்று பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து கேவலப்படுத்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ரத்தவெறி கொண்ட சாத்தான்கள் ஓதும் வேதம் தமிழகத்தில் பலிக்கவே பலிக்காது என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
கோவை சிலிண்டர் வெடிப்புக்கு முன் முபின் வைத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ..? அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம்