மாணவிகள் கொலுசு அணிந்து வரலாமா ? அமைச்சர் செங்கோட்டையன் புது விளக்கம் …

By Selvanayagam PFirst Published Dec 2, 2018, 7:28 AM IST
Highlights

பள்ளிக்கூடத்துக்கு மாணவிகள் விலை மதிப்புள்ள நகைகள் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும். மாணவிகள் கொலுசு அணிந்து வந்தால், கவனச்சிதறல் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், ஆனால் பூ வைத்துக் கொண்டு வருவதில் எந்தத் தடையும் இல்லை என்று கூறியுள்ளார்.

மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு தலையில் பூவைத்து வரக் கூடாது என்றும் . கொலுசு அணிந்து வரக்கூடாது என்றும்  பள்ளி கல்வித்துறை சார்பில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மாணவிகள்  மற்றும் பெற்றோர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது . இதில் பங்கேற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அடுத்த மாதத்துக்குள், பிளஸ்–2 படிக்கும் மற்றும் பிளஸ்–2 படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட உள்ளது. வரும் கல்வியாண்டு முதல் பள்ளி திறந்த உடனேயே இலவச பாட புத்தகங்கள் வழங்குவது போல, விலையில்லா சைக்கிளும், மடிக்கணினியும் வழங்கப்படும் என தெரிவித்தார்..

671 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் செலவில் அறிவியல் ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களின் எதிர்கால கல்வி சிறப்பாக அமையும். அடுத்த மாதம் சிறப்பு ஆசிரியர்கள் புதியதாக நியமிக்கப்பட உள்ளார்கள்.

நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு 26 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கஜா புயல் காரணமாக விண்ணப்பிக்க மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 8–ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற உள்ள தேசிய திறன் பயிற்சி வரும் 15–ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆண்டுகளாக பிளஸ்–2 மற்றும் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு 3,242 தேர்வு மையங்கள் தான் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 750 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது என கூறினார்..

தொடர்ந்து பேசிய அவர், பள்ளிக்கூடத்துக்கு மாணவிகள் விலை மதிப்புள்ள நகைகள் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும் என்றும்,  மாணவிகள் கொலுசு அணிந்து வந்தால், கவனச்சிதறல் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.  மற்றபடி மாணவிகள் தலையில் பூ வைத்துக் கொண்டு பள்ளிக்கு வருவதில் எந்த தடையும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

click me!