
தூத்துக்குடியில் அமைதி திரும்பவே 144 உத்தரவு போடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட முதல்வர், “ஊர்வலத்தில் வந்தவர்கள் காவல் துறையினரைத் தாக்கியுள்ளனர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த வாகனங்களை எரித்துள்ளனர், ஸ்டெர்லைட் குடியிருப்புக்குள் புகுந்து அங்குள்ள வாகனத்துக்குள் புகுந்து தீ வைத்துள்ளனர்.
எனவே, பதற்றமான நிகழ்வு ஏற்பட்டதையடுத்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது” என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்தார். ஆனால், துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதியளித்தது யார்? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு முதல்வர் பதிலளிக்காத எடப்பாடியாரை ஒட்டுமொத்தமாக திட்டித் தீர்க்கின்றனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக, “மிகவும் கவலையில் இருக்கும் எடபபாடியாரை நேற்று இரவு செங்கோட்டையன் சந்தித்திருக்கிறார். அப்போது அவரிடம் வருத்தத்துடன் பேசியிருக்கிறார் எடப்பாடியார். 'ஊருக்குள் என்ன பிரச்சினை வந்தாலும் இப்போ என்னைத் திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. மறுபடியும் அந்த மன்னார்குடி குடும்பமே வரணும்னு நினைக்கிறாங்களா என்னன்னு தெரியல.
இதுவரைக்கும் எந்த இடத்திலாவது யாருகிட்டயாவது நான் முதல்வர் என்று எப்போதாவது திமிராக நடந்துகிட்டேனா? இல்ல பேசியிருக்கேனா? நானும் கவுன்சிலரை பார்க்கிற மாதிரி யாரு வேணும்னாலும் நினைச்ச நேரத்துல பார்த்துட்டுதானே இருக்காங்க. போன வாரத்துல கூட நம்ம கட்சியை சேந்தவங்க நெல்லையில் இருந்து ராத்திரி 11 மணிக்கு வர்றாரு. பார்க்க முடியாதுன்னா சொல்ல முடியும்? நானும் பார்த்துதான் அனுப்பினேன்.
நம்ம அமைச்சர்களும் சரி... எம்.எல்.ஏ.க்களும் சரி நெனச்ச நேரத்துல வந்து பார்த்துட்டுதான் இருக்காங்க. நான் என்ன தினகரன் மாதிரி திடீர்னு அரசியலுக்கு வந்தவனா? நானும் கட்சிக்காக உழைச்சுதானே இந்த இடத்துக்கு வந்திருக்கேன்.
ஆனா இங்க பாருங்க... யூதர்கள் படுகொலை ஹிட்லரும், ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை இராஜபக்சே, உகாண்டாவில் 3 லட்சம் பேர் கொன்ற இடி அமீன் இவங்க லிஸ்ட்ல எடப்பாடி பழனிச்சாமின்னு சிலர் என் படம் போட்டு நோகடிக்கிறாங்க. இது பத்தாதுன்னு எதிர்கட்சியில் உள்ள சில எம்.எல்.ஏ.க்கள் முதல்வர்னு கூட பார்க்காமல் மூடப்பட்ட அறைக் கதவை எட்டி உதைத்து போராட்டம் செய்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் இருந்து வெளியே வரணும். என்ன செய்யலாம், ஏதாவது வழி சொல்லுங்கன்னே' என்று கேட்டாராம்.
அதற்கு அமைச்சர் செங்கோட்டையன், ' எது நடந்தாலும் அரசாங்கத்தை குறை சொல்றவங்க இருக்கத்தான் செய்வாங்கண்ணே. நம்ம வேலையை நாம பார்த்துட்டே இருப்போம். இன்னும் ஒரு வாரம் அதிகபட்சமாக இதை பற்றி பேசுவாங்க. அடுத்து வேறு ஒரு பிரச்சினை வந்தா இதையெல்லாம் அவங்க மறந்துடுவாங்க. நான் தான் உங்ககிட்ட முன்னாடியே சொன்னேன் இல்லையா...
ஒரு திட்டம் பற்றி. அதாவது 6ம் வகுப்பில் இருந்து 10 வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு டேப் (tab) கொடுப்பது சம்பந்தமாக... அந்த லிஸ்ட் எடுத்துட்டோம். மொத்தமாக 60 லட்சம் பேரு இருக்காங்க. அந்த குழந்தைகளுக்கு இலவசமாக டேப் கொடுக்க போறதாக அறிவிச்சுடலாம். இந்த விஷயம் மக்கள் மத்தியில் உடனடியாக நமக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திடும். தூத்துக்குடி பிரச்சனையை மறந்துட்டு டேப் விஷயத்த பேச ஆரம்பிச்சிருவாங்க' என சொன்னாராம் செங்கோட்டையன்.
அதற்கு, முதல்வர் எடப்பாடியாரோ, இது நல்ல யோசனையா இருக்கு ' தூத்துக்குடி பிரச்னையை மறக்கிறாங்களோ இல்லையோ டேப் கொடுப்பது நல்ல திட்டம்தான் அதை உடனே யோசிப்போம்...' என்று சொல்லியிருக்கிறார்.