மதுரையில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் எனவும் அப்போது தான் அது தென் மாவட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் கேரள மாநிலத்திற்கும் பயன்படும் எனவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஏதுவான இடங்களாக தமிழக அரசு 5 இடங்களை தேர்வு செய்து மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
பெருந்துறை (ஈரோடு), செங்கல்பட்டு (காஞ்சிபுரம்), தோப்பூர் (மதுரை), செங்கிப்பட்டி (தஞ்சாவூர்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை) ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு 31.10.2014-ல் பட்டியல் அனுப்பப்பட்டது. இந்த இடங்களை மத்திய குழு ஆய்வு செய்துள்ளது. ஆனால், இவற்றில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்பதை மத்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை.
தமிழக அரசு கோரிக்கை விடுத்தும், நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கும் இடத்தை மத்திய அரசு இதுவரை தேர்வு செய்து அறிவிக்கவில்லை.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் மத்திய அரசு அலட்சியம் காட்டி வருகிறது.
இந்நிலையில், மதுரையில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் எனவும் அப்போது தான் அது தென் மாவட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் கேரள மாநிலத்திற்கும் பயன்படும் எனவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தெர்மாக்கோலை வைத்து ஆற்றில் நீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு திட்டம் தீட்டியது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.