மாறணும்.. அதிமுக தலைமை மாறணும்… கொளுத்தி போட்ட செல்லூர் ராஜூ

By manimegalai aFirst Published Oct 10, 2021, 7:47 PM IST
Highlights

அதிமுகவில் தலைமை மாற வேண்டும் என்று பேசி அதிரடி காட்டி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

மதுரை: அதிமுகவில் தலைமை மாற வேண்டும் என்று பேசி அதிரடி காட்டி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

அதிமுக ஆட்சியில் இருந்த போது காமெடியாக அவர் பேச்சு இருந்ததும், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கண்டென்ட் கொடுப்பவராக ஆளுமைப்படுத்தப்பட்டவர் செல்லூர் ராஜூ. இப்போது இவர் பேசியிருக்கும் சில விஷயங்கள் கட்சிக்குள் புகைச்சல் இருப்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறது.

அதிமுக பொன்விழா ஆண்டு வரும் 17ம் தேதி தொடங்குகிறது. அதற்கான ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ பேசியதாவது:

தம்மை நம்பிய தொண்டர்களுக்காக புரட்சி தலைவர் எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்தார். இந்த இயக்கம் அதிமுக தொண்டர்களுக்கான இயக்கம்.

திமுகவில் கட்சி தலைவர் பதவி, முதலமைச்சர் பதவி என்பது கலைஞர் குடும்பத்தினருக்கு என்பது தெரிந்த ஒன்று. ஆனால் அதிமுகவில் தான் சாதாரண தொண்டனும் முதலமைச்சராக முடியும். கட்சியின் தலைவராகவும் முடியும். அதற்கு எடுத்துக்காட்டு தான் ஓபிஎஸ், இபிஎஸ்.

ஆகையால் அதிமுக சிறப்பாக இருக்க இன்னும் புதுப்புது இளைஞர்கள் பொறுப்புக்கு வரவேண்டும். இளைஞர்கர் பலருக்கும் புதுப்புது பதவிகள் தரப்பட வேண்டும். தலைவர்கள் முக்கியமல்ல, தொண்டர்கள் தான் முக்கியம் என்று பேசியிருக்கிறார் செல்லூர் ராஜூ.

சட்டசபை தேர்தலில் சில தவறான வியூகங்களால் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்று ஓபிஎஸ் ஏற்கனவே பேசிவிட்ட நிலையில் அதற்கு கட்டியம் கூறுவது போல அதிமுக தலைமையில் இனி மாற்றம் தேவை என்று செல்லூர் ராஜூ பேசியிருப்பது கட்சியில் அடுத்த விவாதத்தை ஆரம்பித்து வைத்துள்ளது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்…!

click me!