பிரஷாந்த் கிஷோர் எடுத்த ரகசிய சர்வே... விழிபிதுங்கி தவிக்கும் மு.க.ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published Aug 3, 2020, 7:49 PM IST
Highlights

வாக்கு சதவிகிதம் கூடியிருப்பதால் அதனை காரணம் காட்டி காங்கிரஸ் 50 சீட்டுகளுக்கு மேல் கேட்கக்கூடும்  என விழிபிதுங்கி தவிக்கிறாராம் ஸ்டாலின். 

காங்கிரஸை தமிழக ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டக் கட்சி திமுக. 1971ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கும் தமிழக சட்டப்பேரவைக்கும் ஒன்றாக தேர்தல் நடந்தது. அந்த நேரத்தில் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டிருந்தது. காமராசர் தலைமையில் ஓரணியாகவும், இந்திரா காந்தி தலைமையில் மற்றொரு அணியாகவும் காங்கிரஸ் செயல்பட்டது. எந்தக்கட்சி தமிழகத்தில் தங்கள் ஆட்சியை அகற்றுவதற்காக தொடங்கப்பட்டதோ அக்கட்சியுடனே கூட்டணி சேர்ந்தார் இந்திரா காந்தி. திமுக - காங்கிரஸ் கூட்டணி 1971ல் முதன்முறையாக உதயமானது. எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தாரோ அக்கட்சியின் ஆட்சியையே டிஸ்மிஸ் செய்தார் இந்திரா காந்தி. தமிழகத்தில் நடைபெற்று வந்த திமுக ஆட்சி 1976ஆம் ஆண்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

காங்கிரஸ், திமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தது. நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்றார் கருணாநிதி. இந்திராவோ தன் பங்கிற்கு கருணாநிதியை நம்பலாம், அவர் ஆதரித்தால் முழுமையாக ஆதரிப்பார், எதிர்த்தால் தீவிரமாக எதிர்ப்பார் எனக் கூறினார். 1980ல் நடந்த அந்தத் தேர்தலில் தமிழகத்தில் 22 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 20 இடங்களிலும், 16 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 16 இடங்களையும் கைப்பற்றின. மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இந்திரா இரண்டாவது முறையாக பிரதமரானார். விளைவு, கருணாநிதிக்கு ஏற்பட்ட நிலை எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. அவரது அரசு கலைக்கப்பட்டது.

தமிழகத்தின் மீது சட்டப்பேரவைத் தேர்தல் திணிக்கப்பட்டது. திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணி 1980 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர்ந்தது. 114 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 31 இடங்களிலும், 112 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த எம்.ஜி.ஆர். மீண்டும் முதலமைச்சரானார்.

24 ஆண்டுகளுக்குப் பிறகு 2004ஆம் ஆண்டு உதயசூரியனும், கையும் மீண்டும் இணைந்தன. அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 40 இடங்களையும் கைப்பற்றிய திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிமுக அணியை தோற்கடித்தது. இந்தக் கூட்டணி 2006 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தது. 34 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் திமுக ஆட்சிக்கு ஆதரவளித்தது. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் இருகட்சிகளின் நல்லுறவு நீடித்தது. 22 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 18 இடங்களிலும், தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. 2011ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை இணைந்து சந்தித்த இந்தக் கூட்டணியால் ஆட்சியை தக்க வைக்க முடியவில்லை.

2004ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவையில் திமுக முக்கிய பங்கு வகித்தது. 9 ஆண்டுகள் நீடித்த கூட்டணி, இலங்கைப் பிரச்னையால் முறிந்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து களம் கண்ட காங்கிரஸும், விடுதலைச் சிறுத்தைகள், ம.ம.க. உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்த திமுகவும் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவின. தமிழகத்தில் 2014-ம் ஆண்டு 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது. அப்போது 17 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை அந்தக் கட்சி பெற்றது. இது பதிவான மொத்த வாக்குகளில் 4.3 விழுக்காடு.

2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும் காங்கிரஸும் மீண்டும் கரம்கோர்த்தன. 176 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 89 இடங்களிலும், 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. எனினும், இந்தக் கூட்டணியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு 6.4 சதவிகித வாக்குகள் கிடைத்தன. 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவ காங்கிரஸ் கட்சிக்கு 41 சீட்டுகள் கொடுத்ததும் ஒரு காரணம் என இப்போதும் கூறப்படுவதுண்டு. 2016 முதலே திமுகவுடன் இணைந்து செயல்பட்ட காங்கிரஸ் கட்சி 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணியை தொடர்ந்தது. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடரலாம் எனக் கருதப்படுகிறது.

 

இந்த முறை  200 தொகுதிகளுக்கும் மேல் திமுக போட்டியிட வேண்டும் எனக் கருதுகிறர் மு.க.ஸ்டாலின். ஆகையால், காங்கிரஸ் கட்சிக்கு குறைவான அளவில் சீட் கொடுக்க வேண்டும் என திட்டமிட்டு இருந்தார். அதற்காக ஐபேக் நிறுவனர் பிரஷாந்த் கிஷோரை வைத்து காங்கிரஸின் செல்வாக்கு குறித்து ரகசிய சர்வே நடத்தச் சொல்லி இருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதன்படி பிரஷாந்த் கிஷோர் டீம் ரகசிய சர்வே எடுத்து மு.க.ஸ்டாலினிடம் கொடுக்க அவர் பயங்கர ஷாக்காகி விட்டதாக கூறுகிறார்கள். வாக்கு சதவிகிதம் கூடியிருப்பதால் அதனை காரணம் காட்டி காங்கிரஸ் 50 சீட்டுகளுக்கு மேல் கேட்கக்கூடும்  என விழிபிதுங்கி தவிக்கிறாராம் ஸ்டாலின். 

click me!