தேர்தல் நேரத்தில் திமுகவினருக்கு நாக்கில் சனி... செம்ம வெறுப்பில் மு.க.ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published Mar 29, 2021, 5:55 PM IST
Highlights

இரண்டு மாதங்களுக்கு முன்னர் 165 தொகுதிகள் வரை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட திமுக இப்போது தனித்து பெரும்பான்மை பெறுவது மிக கடினம் என கள நிலவரங்கள் கூறுகின்றன.
 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி இந்தமுறை ஆட்சியை பிடிக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் அடுத்து ஆட்சிக்கு யார் வருவார் என பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பில் திமுக என பெரும்பான்மையான கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

ஆனால் தற்போதைய நிலையில் கருத்து கணிப்பு முடிவுகள் பெரும்பாலும் தொங்கு சட்டமன்றம் அமையவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்னர் 165 தொகுதிகள் வரை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட திமுக இப்போது தனித்து பெரும்பான்மை பெறுவது மிக கடினம் என கள நிலவரங்கள் கூறுகின்றன.

இதற்கு அதிமுக பாஜக பாமக கூட்டணி ஒருபுறம் என்றால், திமுகவில் இருக்கும் சில நபர்களே உள்ளடி வேலையில் ஈடுபடுவது திமுக தலைமைக்கு தெரியவந்துள்ளது. தமிழன் பிரசன்னா போன்ற  பேச்சாளர்களை விவாதங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டாம் என வியூகம் வகுக்கும் குழு குறிப்பிட்டது அவர் பங்கேற்றால் இந்துக்கள் வாக்குகள் கிடைக்காது எனவும் அந்த நிறுவனம் திமுக தலைமைக்கு தெரிவித்தது.

இதையடுத்து பிரசன்னா ஓரம்கட்டபட்டார். ஆனால், பிரசன்னா இல்லாத வேலையை திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா செய்துவிட்டார். முதல்வர் பழனிசாமி பிறப்பு குறித்து அவதூறாக பேசி மொத்தத்தில் கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு இருந்த ஆதரவை கெடுத்துவிட்டார். இது ஒருபுறம் என்றால் செந்தில் பாலாஜி நாங்கள் ஆட்சிக்கு வந்த 5 நிமிடத்தில் வண்டியை எடுத்துக்கொண்டு மணல் அள்ளலாம் எனவும், தடுக்கும் அதிகாரிகள் இருக்க மாட்டார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

இது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிசம் அதிகரிக்கும் என எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டு சொல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. திண்டுக்கல் லியோனி பெண்கள் இடுப்பை பற்றி பேச மொத்தத்தில் பிரச்சார களத்தில் திமுகவினரே தங்கள் கட்சி மீது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கி விட்டார்கள்.

இது ஒருபுறம் என்றால் கனிமொழி தரப்பிற்கு தேர்தலில் சீட் கொடுக்கவில்லை என அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனராம். அவர்கள் தான் ஆ.ராசாவை தூண்டிவிட்டதாக இணையத்தில் காரசாரமாக விவாதங்கள் எழுந்துள்ளன. எ.வ.வேலு கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதன் பின்னணியில் திமுகவை சேர்ந்த நபர்களே பின்புலத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவை அனைத்தும் சேர்ந்து தேர்தலில் திமுகவிற்கு எதிராக பலத்த சேதத்தை உண்டாக்கும் என திமுக தலைவர் ஸ்டாலினிடம் வியூகம் வகுக்கும் குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து உடனடியாக ஆ.ராசா, செந்தில்பாலாஜி இன்னும் மூன்று நபர்களை தொடர்பு கொண்டு வாயை அடக்கி பேச அதிரடி தடை விதித்து இருக்கிறார். திமுக தனித்து ஆட்சி அமைக்கும் என ஸ்டாலின் கணக்கிட்டு பணியை தொடங்கியிருந்த நிலையில் அவரது கனவை கலைக்கும் முயற்சியில் திமுகவினரே இறக்கி இருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

click me!