போன வருஷம் சாத்தான்குளம் கொலை... இப்போ சேலம்... எடப்பாடியின் ஆக்‌ஷனும் மு.க.ஸ்டாலினின் ரியாக்‌ஷனும்!

By Asianet TamilFirst Published Jun 23, 2021, 8:44 PM IST
Highlights

சேலத்தில் போலீஸார் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

சேலம் மாவட்டம் பாப்பநாய்க்கன்பட்டி சோதனை சாவடியில் நேற்று மாலை இடையப்பட்டியைச் சேர்ந்த முருகேசனை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும்  அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதே பாணியில் சேலத்தில் காவல்துறை அதிகாரியின் தாக்குதலுக்கு ஒருவர் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் சட்டப்பேரவையில் இன்று எதிரொலித்தது. எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசினார். “ பாப்பநாயக்கன்பட்டி சோதனை சாவடியில் குடிபோதையில் வந்த நபரை போலீசார் தாக்கியதில் முருகேசன் உயிரிழந்த சம்பவத்துக்குக் காரணமான காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருடைய குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்தத் தகவல் என் கவனத்துக்கு வந்தவுடன், உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன். இதுதொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. தவறு செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிலளித்தார்.

click me!