நெருங்கும் சசிகலா விடுதலை..! தயங்கும் எடப்பாடி பழனிசாமி..! சரண்டரா? சமாதானமா?

By Selva KathirFirst Published Sep 23, 2020, 5:08 PM IST
Highlights

சசிகலா விடுதலை நெருங்கி வரும் சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரிடம் சரண் அடைவாரா? சமாதானமாக செல்வாரா? என்று பல்வேறு யூகங்கள் எழுந்து வருகின்றன.

சசிகலா விடுதலை நெருங்கி வரும் சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரிடம் சரண் அடைவாரா? சமாதானமாக செல்வாரா? என்று பல்வேறு யூகங்கள் எழுந்து வருகின்றன.

2011ம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்று இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. இதே போல் 2016ம் ஆண்டு ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் எடப்பாடி பழனிசாமி இடம் பெற்று இருந்தார். இந்த இரண்டு சமயங்களிலும் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெகு பிரபலம். அதாவது 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட அமைச்சரவை புகைப்படத்தில் கடைசி பெஞ்சில் நிற்பார் எடப்பாடியார். ஆனால் 2016ம் ஆண்டு முதல் வரிசைக்கு வந்திருப்பார் எடப்பாடி பழனிசாமி. இத்தனைக்கும் ஊடக வெளிச்சம் அப்போது வரை எடப்பாடி பழனிசாமிக்கு சிறிதும் கிடையாது.

ஆனால் 2016ம் ஆண்டு பொதுப்பணித்துறை இலாகா அவரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு தான் யார் இந்த எடப்பாடி பழனிசாமி என்று அதிமுகவினர் தொடங்கி பலரும் தேடத் தொடங்கினர். அப்போது முதல் எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சி அசுரத்தனமாக இருந்தது. இடையே ஜெயலலிதா மறைந்தார், ஓபிஎஸ் கலகம் செய்தார். சசிகலா சிறை சென்றார். எடப்பாடியார் முதலமைச்சர் ஆனார். அதாவது சசிகலா சிறை செல்வதற்கு முன்னர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கினார்.

சசிகலா முதலமைச்சர் ஆக முடியாது என்கிற நெருக்கடியில் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருந்தவர் செங்கோட்டையன். அதிமுகவில் மிகவும் சீனியர் என்பதால் அவர் தான் முதலமைச்சர் என்று ஏறக்குறைய உறுதியாகின. ஆனால் அவரே செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியுள்ளதாக அறிவித்தார். இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் சசிகலா தான். ஏனென்றால் தான் சிறை சென்ற பிறகு கட்சியை டிடிவி பார்த்துக் கொள்வார். ஆட்சியை பார்த்துக் கொள்ள தனக்கு ஒரு நம்பிக்கையானவர் தேவை, அவர் தான் எடப்பாடியார் என்று முடிவு செய்தார் சசிகலா.

ஓஎஸ் மணியன், திண்டுக்கல் சீனிவாசன், வைத்திலிங்கம் என்று சசிகலாவிற்கு மிக மிக நெருக்கமானவர்கள் பலர் இருந்தனர். ஆனால் அவர்களை எல்லாம் தாண்டி எடப்பாடி பழனிசாமியை சசிகலா தேர்வு செய்ததற்கு காரணம் விசுவாசம். அதாவது அத்தனை நாட்களாக எடப்பாடியார், காட்டி வந்த விசுவாசமே அவரை முதலமைச்சராக சசிகலாவை தேர்வு செய்ய வைத்தது. இந்த அறிவிப்பு வெளியாகும் போது கூட சசிகலாவிற்கு அருகே அவர் உட்கார வைக்கப்படவில்லை. இதனால் தனது நாற்காலியில் இருந்து எழுந்து தவழ்ந்து கொண்டே வந்து சசிகலா கால்களை பிடித்த வீடியோவை ஜெயா டிவி தற்போதும் ஒளிபரப்பி வருகிறது.

இந்த அளவிற்கு விசுவாசமாக இருந்த எடப்பாடி பழனிசாமி, சசிகலா சிறை சென்ற சில மாதங்களிலேயே அவரை ஓரம்கட்டினார். இதற்கு காரணம் டெல்லி நெருக்கடி என்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. சசிகலாவிடம் இருந்து ஒதுங்கினாலும் அவரை விமர்சிப்பதை அறவே தவிர்த்து வந்தவர் எடப்பாடியார். இதனை கூட விசுவாசம் என்றே எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு கட்டத்தில் தன்னை முதலமைச்சர் ஆக்கியது யார் என்கிற விவாதம் எழுந்தது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது சசிகலாவால் தான் என்று டிடிவி தினகரன் தொடர்ந்து கூறி வந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் தன்னை முதலமைச்சராக்கியது அதிமுக எம்எல்ஏக்கள் என்று மட்டும்கூறி வந்தார் எடப்பாடியார். இது தான் அவர் சசிகலாவிற்கு எதிராக பேசிய முதல் மற்றும் கடைசி வார்த்தை. இதை தவிர்த்து சசிகலாவின் பெயரை கூட ஒரு முறை கூட எடப்பாடியார் உச்சரித்தது இல்லை. இந்த நிலையில் தண்டனை காலம் நிறைவு பெற்று விரைவில் சசிகலா விடுதலையாக உள்ளார். இது குறித்து ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமியுடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  இது போன்ற கேள்விகள் கேட்க இதுவா இடம்? என்று பதில்கேள்வி மட்டும் எழுப்பிவிட்டு அது குறித்து பேசுவதையே தவிர்த்தார் எடப்பாடியார்.

அதாவது சசிகலா விவகாரத்தை பொறுத்தவரை எடப்பாடியார் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளார். சசிகலாவை விமர்சிக்க கூடாது என்பது தான் எடப்பாடியாரின் அந்த நிலைப்பாடு. சசிகலா சிறையில் இருந்தவரை இந்த நிலைப்பாடு பிரச்சனை இல்லை. ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு சசிகலா அதிமுக பொதுச் செயலாளர் பதவியை மறுபடியும் உரிமை கோருவார்.

அப்போது, எடப்பாடியார் என்ன நிலைப்பாடு எடுப்பார்? என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. சசிகலாவை விமர்சிக்காமல் இனியும் எடப்பாடியால் அரசியல் செய்ய முடியுமா? என்கிற கேள்விக்கு எடப்பாடியிடம் மட்டுமே பதில் இருக்கும். டிடிவி தினகரன் கட்சியில் ஓரம்கட்டப்பட்ட போதும் கூடஅவருக்கு எதிராக எடப்பாடியார் எதுவும் பேசாமல் இருந்தார். ஆனால் டிடிவி எடப்பாடியை விமர்சித்த பிறகே டிடிவிக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார் எடப்பாடியார். எனவே சசிகலா விடுதலைக்கு பிறகு எடுக்கப்போகும் முடிவு தான் எடப்பாடி பழனிசாமி அவரை விமர்சிப்பாரா? அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பாரா? என்பதற்கான விடையாக இருக்கும். அதுவரை சசிகலா விவகாரத்தில்
எடப்பாடியார் பதுங்கிய நிலையிலேயே இருப்பார் என்கிறார்கள்.

click me!