சசிகலாவின் ‘சிறை’ப்படம் பரப்பன அக்ரஹாராவில் திரையிடப்பட்டு சரியாக ஒரு வருடம் கடந்து விட்டது. நான்கு வருட சிறை தண்டனை என்பது ஒரே சோக காட்சிகள் நிரம்பியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஒரு வருடத்தில் ஏகப்பட்ட ஆக்ஷன் காட்சிகளையும், அதிர்ச்சி சீன்களையும், காமெடி க்ளிப்பிங்ஸ்களையும், செமத்தியான செண்டிமெண்ட் சீன்களையும் கொண்டதாக இருந்ததுதான் ஹைலைட்டே.
சின்னம்மா சசியின் ஓராண்டு சிறையனுபவத்தின் பரபர ஹிட் சீன்கள் இதோ...
* கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதியன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் இளவரசி மற்றும் சுதாகரனுடன் சிறைப்பட்டார் சசிகலா.
* சசியின் கைதி எண் 9234. (கூட்டிப் பாருங்கள் ஜெயலலிதாவுக்கு பல சமயங்களில் ராசியாக இருந்த 9 எனும் நம்பர் வரும்)
* துவக்கத்தில் தினகரன், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சசியை அடிக்கடி சந்தித்ததனர். ஆனால் எடப்பாடி கோஷ்டி சசி மற்றும் தினகரனை கட்சியிலிருந்து விரட்டிக் கட்ட துவங்கிய பிறகு அமைச்சர்கள் அங்கு வருவதை நிறுத்திக் கொண்டனர். நாடாளுமன்ற துணை சபாநாயகர் அரசுப் பணத்தில் அதிக முறை பறந்தது பெங்களூருவுக்குதான்.
சரி! இனி பரப்பன அக்ரஹாரா தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் ’சசி’ திரைப்படத்தில் அரங்கேறிய பல வகையான காட்சிகளின் ஹைலைட்ஸ்களை காண்போம்...
அதிரடி ஆக்ஷன் காட்சிகள்:
பரப்பன அக்ரஹாரா சிறையின் டி.ஐ.ஜி.யாக பதவியேற்ற ரூபா, ஜூலை மாதம் பற்ற வைத்த பட்டாசு தேசத்தையே திரும்ப வைத்தது. அதாவது பரப்பன சிறையில் சசிகலா தனி அறைகளில் மிக சொகுசான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்! என்று ஒரு புகாரை கிளப்பினார்.
இதன் பிறகு வெளியான சிறை வீடியோ காட்சிகளில் சசியும், இளவரசியும் ஏதோ ஷாப்பிங் சென்று வருவது போன்ற உடை, கைப் பைகளுடன் வெளியிலிருந்து சிறைக்குள் நுழைவது போன்ற காட்சிகள் கதி கலக்கின.
சசிக்கு சிறை உணவுகள் வழங்கப்படுவதில்லை! இளவரசியின் மகன் விவேக்கின் ஏற்பாட்டில் சிறைக்கு அருகிலுள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் சமைக்கப்படும் உணவுகள்தான் சசி, இளவரசி மற்றும் சுதாகரன் மூவருக்கு வந்து சேர்கிறது என்று பெரும் புயல் கிளம்பியது.
சிறைக்குள் சசிகலா கைதிகளுக்கான உடையணியாமல் வண்ண வண்ண உடைகளில் கூலாக திரிகிறார் என்று வீடியோ ஆதாரங்கள் காட்டின.
இதெல்லாம் சசி திரைப்படத்தின் கலக்கலான ஆக்ஷன் காட்சிகள்.
காமெடி க்ளிப்பிங்ஸ்:
இந்த படத்தில் காமெடியன்களென்றால் அது மக்கள்தான். காரணம், முறைகேடாக சொத்து சேர்த்த குற்றத்துக்காக 4 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறை சென்ற சசிகலா, நினைத்த நேரத்தில் விசிட்டர்களை சந்திப்பதும், சசிக்கு பணிவிடை செய்ய சிறை ஊழியர்கள் பயன்படுத்தப்படுவதும் அதிர்ச்சியின் உச்சங்கள். ஆனால் சிறை சென்ற சசி ‘குற்றத்தை நினைத்து வாடுவார்’ என்று நம்பிய மிஸ்டர் பொதுஜனமெல்லாம் இந்த படத்தின் காமெடியன்களே.
இண்டர்வெல்:
சசிகலாவின் பரப்பன அக்ரஹாரா சிறைபடத்தில் இடைவேளையும் உண்டு. கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தனது கணவர் நடராஜனை சந்திப்பதற்காக சில நாட்கள் பரோலில் வந்தார் சசி. ஆனால் வந்த நோக்கம் நடராஜனை சந்திக்க மட்டுமல்ல, அதைவிட பெரிய பிராஜெக்டுகளில் முக்கிய முடிவுகளெடுக்கவும், பத்திரங்களில் கையெழுத்திடவுமே அவர் வந்தார் என்பது தெளிவாக புரிந்தது.
செண்டிமெண்ட் காட்சிகள்:
இந்த படத்தில் செண்டிமெண்ட் சீன்களும் உண்டு. அது, சிறையில் சசி பல வாரங்களாக மெளனவிரதம் இருந்து வந்தவைதான். ஜெயலலிதா இறந்த முதல் வருட நினைவு நாளான 2017 டிசம்பர் 5-ம் தேதியன்று மெளன விரதத்தை துவங்கினாராம் சசி. அப்போது தன்னை சந்தித்த தினகரன், வெற்றிவேல், புகழேந்தி ஆகியோரிடம் எல்லா விஷயங்களையும் எழுதிக்காட்டியே புரிய வைத்தார்.
சசியின் மெளன விரதம் நேற்றுடன் (2018 பிப் 14) முடிவுக்கு வந்திருக்கிறது.
பரப்பன சிறையில் இன்னும் 3 வருடங்கள் ஓட இருக்கும் இந்தப்படத்தில் இன்னும் என்னென்ன காட்சிகளெல்லாம் அரங்கேற காத்திருக்கிறதோ தெரியவில்லை.
ஆனால் எப்படியும் இந்தப் படம் ஹிட்டுதான் என்பதுதான் ஹைலைட்டே!