Sasikala : டிசம்பர் 5 - சசிகலாவின் பிரம்மாஸ்திரம் !! தலை தப்புமா அதிமுக தலைமைக்கு..?

By Ganesh RamachandranFirst Published Dec 1, 2021, 7:48 PM IST
Highlights

அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் அமைதியாக காய் நகர்த்தி வரும் சசிகலா, அதிரடிக்கு தயாராகிவிட்டார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5ம் தேதியை குறி வைத்துள்ளாராம் சசிகலா.

அமமுக என்ற கட்சி இருந்தாலும், அதிமுகவை கைப்பற்றுவதே நோக்கம் என்று போர்க்குரல் எழுப்பி வருகிறார் சசிகலா. அமமுகவை கலைத்துவிடுங்கள், அமமுக கொடிக்கு பதில் அதிமுக கொடியை பயன்படுத்துங்கள், அதிமுக பொதுச்செயலாளர் என்றே என்னை அழையுங்கள் என்று தனது ஆதரவாளர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறார் சசிகலா. இதனால் அவருக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும், இந்த விவகாரத்தில் தனக்கு உதவாமல் அமமுகவை பலப்படுத்தலாம் என்று சொல்லும் தினகரனிடம் சசிகலா கோபித்துக் கொண்டதாகவும் கூட செய்திகள் வந்தன.

அதிமுக தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோ வெளியிடுவது, அதிமுகவில் உள்ள தனது ஆதரவாளர்களை அழைத்துப் பேசுவது என்று அமைதியான அரசியலையே சசிகலா முன்னெடுத்து வருகிறார். இனி இவையெல்லாம் எடுபடாது, களத்தில் இறங்கி பலத்தை காட்டியாகவேண்டும் என்ற மனநிலைக்கு அவர் வந்துவிட்டார். அதன் தொடக்கம் தான் அவரது தமிழக சுற்றுப்பயணம் என்றார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள். தஞ்சாவூர், மதிரை, இராமநாதபுரம் என்று பயணத்தை தொடங்கி தொண்டர்களை சந்திக்கத் தொடங்கிய சசிகலாவை தடுத்து நிறுத்தியது தொடர்மழை. மழை வெள்ளம் ஓய்ந்த பிறகு தமிழகம் முழுவதும் அவர் சூறாவ்ளிப் பயணத்தை தொடங்குவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் வருகிற டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றுவந்த பிறகு முதன் முறையாக ஜெயலலிதா நினைவு தினத்தில் அவர் பங்கேற்க உள்ளார். அன்றைய தினம் டிடிவி தினகரனோடு இல்லாமல், தனியாக ஜெயலலிதா சமாதிக்கு வந்து மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளார் சசிகலா. அந்த சமயத்தில் மெரினா கடற்கரை முழுவதும் தனது தொண்டர்கள் கடல் போல் திரண்டு நின்று தன்னை வரவேற்க வேண்டும் என்றும், அந்த இடத்தில் எழும் கோஷம் டெல்லி வரை கேட்கவேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளாராம்.

கட்சியில் தனக்கு இன்னும் செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்கவும், ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட தன்னை எதிர்க்கும் அதிமுக தலைவர்களுக்கு எச்சரிக்கை மணி ஒலிக்கவும், டெல்லி பாஜக தலைமைக்கு தனது பலத்தை காட்டவும் ஜெயலலிதா நினைவு நாளை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளாராம் சசிகலா. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தனது ஆதரவாளர்கள் டிசம்பர் 5ம் தேதி மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் திரளவேண்டும் என்று கண்டிப்புடன் கூறியுள்ளாராம் அவர். அவர் வந்து போன பிறகே தனியாக வந்து அஞ்சலி செலுத்துவாராம் டிடிவி தினகரன். அன்றையதினம் அதிமுக தலைவர்கள், தொண்டர்களும் சமாதிக்கு அஞ்சலி செலுத்த வருவார்கள் என்பதால் இப்போதே பரபரக்கத் தொடங்கியுள்ளன அதிமுக, அமமுக வட்டாரங்கள்.

click me!