ஜெயலிதாவின் தோழி வி .கே சசிகலா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்ததற்கானபுகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. நேற்று மாலை இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலிதாவின் தோழி வி.கே சசிகலா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கே சென்று நேரில் சந்தித்துள்ளார். அதற்கான புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. நேற்று மாலை இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி உள்ளநிலையில், அதிமுகவை கைப்பற்றும் பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி மற்றும் அவரை காட்சிகள் சேர்ப்பது என பல்வேறு விவகாரங்கள் சசிகலாவை மையப்படுத்தி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் உரையாடி அதற்கான ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி யிடமிருந்து கட்சியை கைப்பற்றுவதே தனது லட்சியமென அவர் செயல்பட்டு வருகிறார். இதற்காக தமிழகம் முழுவதும் தனது ஆதரவாளர்களை சந்திக்கும் வகையில் தொடர் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. முன்னதாக ஒரு வாரத்திற்கும் மேலாக அவர் தென் மாவட்டங்களில் ஆதரவாளர்களை சந்தித்து வந்தார் என்பது குறிப்பிடதக்கது.
இதற்கிடையில் சசிகலாவுக்கு ஆதரவாக பேசுபவர்களை கட்சியில் இருந்து தூக்கும் அதிரடி நடவடிக்கைகளில் ஓபிஎஸ் -இபிஎஸ் ஆகியோர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் சசிகலாவை கட்சியை சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர் தொடர்ந்து கட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தீவிரம் காட்டி வருவதுடன், தனக்கு எதிரான உள்ளவர்களை கட்டம் கட்டும் செயல்களிலும் தீவிரமாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக கட்சியில் உட்கட்சி தேர்தலை நடத்தி முடித்துள்ளனர். அதில் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாகவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில் தொடர்ந்து நிதானம் காத்து வரும் வி.கே சசிகலா சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். சமீபத்தில் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பி, ஓய்வில் இருந்து வரும் நிலையில், ச சிகலா அவரை சந்தித்துள்ளார். அதேபோல சமீபத்தில் அவர் கலை உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றிருந்தார். இந்நிலையில் வி.கே சசிகலா அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து உள்ளார். நேற்று மாலை இருவரின் சந்திப்பு நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த சந்திப்பின் போதே ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உடனிருந்தார். சசிகலா ரஜினிகாந்த் இடையேயான இந்த சந்திப்பு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.