நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததையடுத்து அதிமுகவை வலுப்படுத்தி சசிகலாவுடன் எடப்பாடி பழனிசாமி தரப்பு இணைய முடிவு செய்துள்ளதாகவும் அதே நேரத்தில் டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க சசிகலா சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றம் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதில் திமுக 38 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற திமுக இப்போது இருந்தே களப்பணியில் தீவிரமாக உள்ளது. அதே நேரத்தில் அதிமுக தரப்பில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே நடக்கும் உட்கட்சி பூசலால் அதிமுக தொண்டர்கள் பலரும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் அதிமுகவை வலுப்படுத்த சசிகலாவுடன் எடப்பாடி இணையலாம் என்ற தகவலும் அரசியல் விமர்சகர்களால் சொல்லப்படுகிறது. மேலும் சசிகலாவை அதிமுகவில் இணைத்தால் தென் தமிழக வாக்குகளை கவர முடியும் என்று எடப்பாடி தரப்பு நினைப்பதாக கூறுகின்றனர்.
பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா வெளிவந்தவுடன் அவரிடம் சமரசம் முயற்சியில் ஈடுபட எடப்பாடி தரப்பு தயாராக இருப்பதாகவும், அதற்கான வேலையை எடப்பாடிக்கு நெருங்கிய அதிமுக நிர்வாகிகள் பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமமுக புகழேந்தி , அதிமுகவோடு சசிகலா இணைந்து செயல்பட்டால் அதை வரவேற்பன் என்று கூறியிருந்தார்.
எனவே வரும் பொதுத் தேர்தலில் எப்படியாவது மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அதிமுக குறிக்கோளாக இருப்பதாக தெரிகிறது. அதே போல் சசிகலா எடப்பாடியுடன் சேர்ந்தால் தினகரனை ஒதுக்கி வைக்கவும் சசிகலா தரப்பு ரெடியாக இருப்பதாக கூறுகின்றனர்.