அதிமுக என்னும் பேரியக்கத்தை வழிநடத்தபோவது சின்னம்மா தான் என்று பொன்னையன் ஆணித்தரமாக கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவின் அடுத்த தலைமை யார் எனபது குறித்த பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. ஒட்டு மொத்த அதிமுக நிர்வாகிகள் அனைவராலும் சசிகலா மட்டுமே இதற்கு தகுதியானவர் என்று கூறப்படுகிறது. சசிகலாவுக்கு சில இடங்களில் எதிர்ப்புகள் இருந்தாலும் ஒட்டுமொத்த கட்சி அணிகள் அவர் பக்கம் இருக்கிறது.
சென்னையில் நாளை பொதுக்குழு கூட உள்ள நிலையில் அதுபற்றி அதிமுக அமைப்புச்செயலாளர் பொன்னையன் கூறியதாவது.
நாளைக் கூட உள்ள பொதுக் குழுவில் பொதுச் செயலாளர் பதவி நிரப்பட வேண்டும். அந்த செயல்முறை பொதுக் குழுவின் ஒரு அங்கமாக நாளை நடைபெற உள்ளது.
பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவாரா? பொதுச் செயலாளர் பதவிக்கு இதுவரைக்கும் போட்டி ஏற்படவில்லை. வேறு யாரும் மனுக்களை தாக்கல் செய்யவில்லை.
அதிமுகவை உருவாக்கிய எம்.ஜி.ஆர். பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு பொதுக் குழுவிற்கும் செயற்குழுவிற்கும் உள்ளது என்ற சட்டவிதிமுறையை உருவாக்கிச் சென்றிருக்கிறார்.
அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த முடிவை எடுத்தாக வேண்டும். அந்த அடிப்படையில் பொதுச் செயலாளரை பொதுக் குழு நாளை தேர்ந்தெடுக்கும்.
ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் காலம் ஒன்றாக அவரது இல்லத்தில் தங்கி அரசியல் பணிகளில் இணைந்து செயல்பட்டு வந்த அனுபவம் மிக்கவரான சசிகலா என்னும் சின்னம்மாவை பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
அதிமுகவின் பல்வேறு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள், அமைச்சர்கள், அதிமுகவின் தலைமைச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர், பொதுக் குழு உறுப்பினர்கள் என அனைவரும் இதே கோரிக்கையை வைத்துள்ளனர்.
ஆனால் இதுவரை சசிகலா அதற்கு ஒப்புதல் தர வில்லை. பொதுக் குழுவில் சசிகலா கலந்து கொள்வதில் பிரச்சனை எதுவும் இல்லை. அவர் கலந்து கொண்டாலும், இல்லாவிட்டாலும், பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கின்ற பொறுப்பு பொதுக்குழுவிற்கு இருக்கிறது.
நாளை பொதுக்குழுவில் அதற்கான முன்னேற்பாடுகள் சிறப்பாக நடைபெறும் என்று தெரிவித்தார்.