1981லேயே பத்திரிக்கையில் வெளியான சசிகலாவின் பேட்டி - அப்போதே பலமுறை சிங்கப்பூர் சென்றாராம்

Asianet News Tamil  
Published : Dec 18, 2016, 12:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
1981லேயே பத்திரிக்கையில் வெளியான சசிகலாவின் பேட்டி - அப்போதே பலமுறை சிங்கப்பூர் சென்றாராம்

சுருக்கம்

கடந்த 1983ம் ஆண்டு பத்திரிகை ஒன்றில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா, பேட்டி அளித்துள்ளார். அதில், தமிழகத்தில் முதல் வீடியோ கம்பெனியை தொடங்கி நடத்தியவர், 1981ம் ஆண்டு சிங்கப்பூர் சென்றார் என பதிவாகியுள்ளது.

மேலும், கடந்த 1984ம் ஆண்டு, ஜெயலலிதாவுக்கு, வி.கே.சசிகலா பழக்கமானார். பின்னர், தோழிகளாயினர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பத்திரிகையில் உள்ள பதிவுகள் வருமாறு:-

திருமதி சசிகலா சென்னையில் “வினோத் வீடியோ விஷன்” வினோத் வீடியோ விஷன் என்கிற வீடியோ கம்பெனியை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் வீடியோ கம்பெனி நடத்துகிற முதல் பெண்மணி இவர்தான்.

வீடியோ தொழில் தொடங்கலாம் என்கிற எண்ணம் இவருக்கு எப்படி வந்தது?

“81ல் சிங்கப்பூர் போயிருந்தேன். ஊர் திரும்பும்போது, ஒரு வீடியோ செட் என் சொந்த உபயோகத்திற்காக வாங்கி வந்தேன். ஓராண்டு கழித்துதான் நாமே சொந்தமாக வீடியோ எடுக்கலாமே என்று தோன்றிற்று. என் கணவரிடம் சொன்னேன். ஓ.கே. என்றார்.

பொதுவாக பல வீடியோ கம்பெனிகளும் திருமணம், வரவேற்பு போன்ற ‘இன்டோர்’ நிகழ்ச்சிகளைத் தான் வீடியோவில் படம் பண்ணுகிறார்கள். திருமணம் மட்டும் இல்லாமல், அவுட்டோர் நிகழ்ச்சிகளையும் சிரத்தை எடுத்து விடியோ பண்ண வேண்டும் என்று நினைத்தேன்.

சென்னை அரசினர் மருத்துவமனையில் ஒருவருக்கு இதய ஆபரேஷன் நடந்தது. அதை அப்படியே வீடியோவில் படமாக்கி கொடுத்தோம். சிகிச்சை நடந்த விதத்தை மற்ற டாக்டர்களுக்கும், மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கும் செல்லித் தருவதற்கு இந்த வீடியோ படங்கள் உதவி கரமாய இருக்கும்.

தமிழ்நாட்டிற்கு உல்லாச பயணிகளாய் வரும் வெளிநாட்டினர். இங்குள்ள பல அரிய காட்சிகளை ஸ்டில் போட்டோக்களாகத்தான் எடுத்துப் போய் கொண்டிருந்தார்கள். இப்போது சென்னையில் நிறைய வீடியோ கம்பெனிகள் இருப்பதால், அவர்கள் ஸ்டில் போட்டோக்களுக்கு பதிலாக, வீடியோ படங்களை எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இப்படி எங்களை அணுகி கேட்ட பல உல்லாச பயணிகளுக்காக மகாபலிபுரம், கன்னியாகுமரி, மதுரை போன்ற ஊர்களுக்கு வீடியோ எடுத்திருக்கிறோம்.

மதுரை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களின் சிறப்பையும், பெருமைகளையும் விளக்கும் வகையில் டாக்குமென்ட்ரி படங்களும் வீடியோவில் செய்திருக்கிறோம்.

அரசு பொருட்காட்சி நடைபெறும் இடங்களில் இந்த டாக்குமென்ட்ரி படங்கள், மக்களுக்கு திரையிட்டு காட்டப்படுகின்றன. இப்படி வீடியோவில் முதன்முதலாக செய்தி படங்கள் எடுக்கத் தொடங்கி இருப்பதும் நான்தான்.

அரசியல் பொதுக் கூட்டங்கள், சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் போன்றவைகளையும் வீடியோ எடுத்துத் தருகிறோம். இதுவும் எங்கள் சோதனை முயற்சிதான். ஆனாலும், பெரிய வெற்றியை தந்தது.

இப்போது பள்ளிக் குழந்தைகளுக்காக கிராமியக் கலைகள், விளையாட்டு முறைகள், விஞ்ஞானப் பாடங்கள் போன்றவைகளையும் வீடியோ படம் எடுத்துக் கொடுக்கவிருக்கிறோம்.”

ஒரு வீடியோ காஸட்டில் உள்ள படம் ஒரிஜினலானதா அல்லது வேறு காஸட்டிலிருந்து திருட்டு பதிவு செய்யப்பட்டதா என்பதை எப்படி கண்டுப் பிடிப்பது?

“படத்தை போட்டு பார்த்த உடனேயே தெரிந்துவிடும். பிக்ஸரில் சரியாக கிளாரிட்டி இருக்காது. அதுமட்டுமல்லாமல் ஆடியோவும் தேய்ந்துவிடும்.

பொதுவாக நம்மூரில் வீடியோ தொழில் எப்படி இருக்கிறது?

“மேல்தட்டு மக்களிலேயே இன்னும் பலபேருக்கு வீடியோ போய்ச் சேரவில்லை. நமது அரசாங்கம் சுங்கவரி என்ற பெயரில் ஏராளமாய் பணம் தீட்டிவிடுகிறார்கள். அவ்வளவு வரி கொடுத்து வீடியோ இறக்குமதி செய்வதானால், அடக்கவிலை அதிகமாகும். இதனால், இங்கே வீடியோ தொழில் சுறுசுறுப்படையாமல் இருக்கிறது.

இவ்வாறு வி.கே.சசிகலா, அந்த பத்திரிகையில் பேட்டியளித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?
Kollur Temple: விஜய்யைத் தொடர்ந்து கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு படையெடுத்த மற்றொரு முதல்வர்!