நான் இருக்கும் வரை அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது...! சசிகலா சூளூரையால் குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்

By Ajmal KhanFirst Published May 15, 2022, 1:51 PM IST
Highlights

அதிமுகவில் சசிகலாவிற்கு இடம் இல்லையென எடப்பாடி பழனிசாமி கூறி வரும் நிலையில், அதிமுவின் உன்னத நிலையை அடைய நானே காரணமாக இருப்பேன் என சசிகலா கூறியது அதிமுக மூத்த நிர்வாகிகளிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் தோல்வியில் அதிமுக

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவு பட்டுள்ளது. இதன் காரணமாக தான் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. அதிமுக தொண்டர்களும் தலைமை மீது அதிருப்தியில் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். எனவே அதிமுகவிற்கு சசிகலா தலைமை தாங்க வேண்டும் என ஒரு பிரிவினர் வலியுறுத்தினர். ஆனால் அதற்கு வாய்ப்பே  இல்லையென மற்றொரு தரப்பு உறுதி பட தெரிவித்து வருகிறது. இதனிடையே சசிகலா தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு சென்று ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். விரைவில் அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

அதிமுகவை அழிக்க முடியாது

இந்தநிலையில் தஞ்சையில் அதிமுக தொண்டர் ஒருவரின் திருமணத்தை சசிகலா இன்று நடத்திவைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய சசிகலா, அதிமுக எத்னையோ உண்மையான தொண்டர்களால் தியாகத்தால் உருவான இயக்கம் என தெரிவித்தார். எதிர்கட்சிகள் எத்தனை கணக்குகள் போட்டாலும், நான் இருக்கும் வரை  இந்த இயக்கத்தை யாராலும் அழித்து விட முடியாது என கூறினார். இதை அனைவரும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என உறுதிபட தெரிவித்தார். இந்த இயக்கம் எத்தனையோ சோதனையான கால கட்டங்களை கடந்து வந்துள்ளதாக தெரிவித்தவர்,  புரட்சி தலைவர் மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அதே சோதனை காலம் தான் தற்போது ஜெயலலிதா மறைவிற்கு பிறகு மீண்டும் ஏற்பட்டுள்ளதாக கூறினார். அன்று கழகம் எவ்வாறு மீண்டு எழுந்து வந்ததோ தற்பொழுதும் புதுப்பொழிவு பெற்று உன்னத நிலையை அடையும் என தெரிவித்தார்.  

அதிமுக உன்னத நிலையை அடையும்

தொடர்ந்து பேசியவர், கழக தொண்டர்கள் கை காட்டும் வரை நிர்வாகிகள் நிலைக்கலாம்,  ஆனால் அந்த கடைக்கோடி தொண்டன் நிமிர்ந்தால் தான் கழகம் நிமிரும் என்பதை மறக்காதீர் எனக்கூறினார்.  கொடி பிடிக்கும் தொண்டர்கள் நம்முடன் இருக்கும் இந்த நிலையில்,  மீண்டும் அதே மிடுக்கோடும் செருக்கோடும் அதிமுக  தலை நிமிரும் என்றும் அதை அனைவரும் மனதில் வையுங்கள் எனக்கூறினார். எனவே அந்த உன்னத நிலையை  அடைய நானே காரணம் ஆவேன் அதுவரை ஓய மாட்டேன் என உறுதியோடு தெரிவித்துக் கொள்வதாக கூறினார். அதிமுகவின் பொற்கால ஆட்சி மீண்டும் வராதா என மக்கள் ஏங்கி தவிப்பதாக கூறினார். எனவே பொறுமை தான் முக்கியம் என தெரிவித்தவர் அனைவரும் ஒரே புள்ளியில் பயணித்து பொறுமை காப்பதே வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என சசிகலா கூறினார். 


 

click me!