தமிழகத்தை திமுகவிற்கு பட்டயம் எழுதி கொடுக்கப்பட்டு விட்டதா..? இனி ஒருபோதும் ஆட்சிக்கு வராது- சசிகலா சவால்

By Ajmal KhanFirst Published Sep 25, 2022, 9:29 AM IST
Highlights

ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது. திமுகவினரை ஆட்சியில் அமரவைத்தது போன்ற ஒரு மிகப்பெரிய தவற்றை, இனி ஒருநாளும் தமிழக மக்கள் செய்ய மாட்டார்கள் என்பது தெளிவாக உறுதியாகிவிட்டது என சசிகலா தெரிவித்துள்ளார்.

திமுக எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில்  அராஜகங்கள், அட்டூழியங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியாளர்களின் அராஜகங்கள் மக்களுக்கு அச்சத்தை அளிக்கிறது. மேலும் பொதுமக்கள் நிம்மதியிழந்து வேதனையால் தவிக்கிறார்கள். நான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கும்முடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் புரட்சிப்பயணம் மேற்கொண்டபோது கூட திமுகவினரின் மக்கள்விரோத நடவடிக்கைகளை வெளிப்படுத்தியிருந்தேன். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரை அடுத்த மெல்ரோசாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் உள்ளே சென்ற திமுக-வை சேர்ந்த தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, அந்நிறுவன நிர்வாகிகளை ஆபாசமாக திட்டி, கை கால்களை உடைத்து விடுவதாக மிரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.இதனைப் பார்த்து தமிழக மக்களும், தமிழகத்தை நம்பி தொழில் செய்துகொண்டு இருக்கும் தொழில்நிறுவனத்தினரும் மிகவும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

கமிஷன், கட்டப்பஞ்சாயத்து

அதேபோல், தென்காசி மாவட்டம் பெருமாள்பட்டி பஞ்சாயத்து தலைவர் குருவம்மாளின் கணவர் காளிராஜ், வேலாயுதபுரத்தில் புதிதாக வீடு கட்டி வரும் தம்பதியரிடம் மிரட்டல் விடுக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் அனைவராலும் பார்க்கமுடிந்தது. அதாவது, பஞ்சாயத்து விவகாரத்தில் எஸ்பி, ஆர் டி ஓ என யாரும் ஒன்றும் செய்ய முடியாது இங்கு எல்லாம் நாங்கள் தான் என்றும், கட்டுமானப் பணிகள் தொடர எங்கள் கையெழுத்து முக்கியம் எனவும் மிரட்டுகிறார். அதேபோன்று மேலூர் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் நாகராஜ் என்பவர் ஒப்பந்ததாரர்களிடம் தனக்கு கமிஷன் தரவேண்டும் என்று மிகவும் ஆதங்கப்பட்டு பேசுகின்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் நாடே பார்க்கிறது.

தமிழகத்தில் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ..! அமித்ஷாவிற்கு அவசர கடிதம் எழுதிய அண்ணாமலை

திமுகவினர் அராஜகம்

அதிகாரிகளுக்கு எவ்வளவு கமிஷன் என்று தெளிவாக குறிப்பிட்டு, பில் வந்தவுடன் தனக்கு 3% கமிஷன் கொடுத்துவிடவேண்டும், இல்லையென்றால் நான் கையெழுத்து போட முடியாது என்று மிகவும் கறாராக பேசுகிறார். இதுபோன்று திமுகவினரின் அத்துமீறல்கள் பொதுவெளியில் வெளிச்சத்திற்கு வந்தது மட்டும்தான் நாம் பார்க்கிறோம். ஆனால் பொதுவெளிக்கு வராமல், அன்றாடம் தமிழகத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் திமுகவினரின் எண்ணிலடங்கா அராஜகங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருப்பது மிகவும் வேதனையை அளிக்கிறது. புரட்சித்தலைவி என்ற ஆளுமை இல்லாததால், திமுகவினரை சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளாக மக்கள் அமர வைத்துள்ளார்கள். 

இனி திமுக ஆட்சிக்கு வராது

ஆனால் திமுகவினரோ, தமிழகத்தை ஏதோ இவர்களுக்கே பட்டயம் எழுதி கொடுத்தது போல் நினைத்துக்கொண்டு செயல்படுவது மிகவும் கண்டனத்திற்குரியது.இதுபோன்ற திமுகவினர் செய்கின்ற மக்கள் விரோத செயல்களை, ஆட்சியாளர்கள் தடுக்கவில்லையென்றால், அது தமிழகத்தையும், தமிழக மக்களையும் கடுமையாக பாதிக்கும் என்பதை இந்த ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்படவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.அதேசமயத்தில் ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது. திமுகவினரை ஆட்சியில் அமரவைத்தது போன்ற ஒரு மிகப்பெரிய தவற்றை, இனி ஒருநாளும் தமிழக மக்கள் செய்ய மாட்டார்கள் என்பது தெளிவாக உறுதியாகிவிட்டது என சசிகலா தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

எப்படி இருந்த தமிழகம் இப்படி ஆகிவிட்டதே..! திமுக அரசுக்கு எதிராக கொந்தளித்த செல்லூர் ராஜு

click me!